கயானா : இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. இதன் மூலமாக டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது. நாளை மறுநாள் நடக்கவுள்ள இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடவுள்ளது.
டி20 உலகக்கோப்பை தொடரின் 2வது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி விளையாடியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ரன்கள் சேர்த்தது. ரோகித் சர்மா 57 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 47 ரன்களும் சேர்த்தனர். இங்கிலாந்து அணி பவுலிங்கில் அடில் ரஷித் மற்றும் லிவிங்ஸ்டன் இருவரும் இணைந்து 8 ஓவர்களில் 49 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்திருந்தனர்.

இதனால் கயானா பிட்சில் பவுன்ஸ் குறைவாக இருந்ததோடு, ஸ்பின்னர்களுக்கும் உதவியாக இருப்பது தெரிய வந்தது. இதன்பின் இங்கிலாந்து அணி தரப்பில் சால்ட் - பட்லர் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. முதல் 2 ஓவர்கள் நிதானம் காட்டிய நிலையில், அர்ஷ்தீப் சிங் வீசிய 3வது ஓவரில் பட்லர் அதிரடியாக 3 பவுண்டரிகளை விளாசி அசத்தினார். இதனால் இங்கிலாந்து அணி பக்கம் ஆட்டம் திரும்புகிறதோ என்று சந்தேகம் எழுந்தது. அப்போது 4வது ஓவரை வீச அக்சர் படேல் உடனடியாக அழைக்கப்பட்டார்.
அக்சர் படேல் வீசிய முதல் பந்திலேயே பட்லர் 23 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து பும்ரா வீசிய 4வது ஓவரில் சால்ட் 5 ரன்களில் வெளியேறினார். பின்னர் வந்த அதிரடி வீரர் பேர்ஸ்டோவும் டக் அவுட்டாகி வெளியேற, இங்கிலாந்து அணி 35 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்த டி20 உலகக்கோப்பையில் இங்கிலாந்து அணி பவர் பிளே ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழப்பது இதுவே முதல்முறையாகும். பின்னர் குல்தீப் யாதவும் அட்டாக்கில் கொண்டு வரப்பட்டார்.
பின்னர் மொயின் அலியும் 8 ரன்களில் ரிஷப் பண்டின் அபார ஸ்டம்பில் ஆட்டமிழக்க, குல்தீப் யாதவ் பவுலிங்கில் சாம் கரண் 2 ரன்களில் வெளியேறினார். இதனால் 10 ஓவர்களில் இங்கிலாந்து அணி 62 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இங்கிலாந்து அணியின் ஹாரி ப்ரூக் சில பவுண்டரிகளை விளாசிய நிலையில், குல்தீப் யாதவ் பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் அடிக்க முயன்று அவரும் 25 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் ஜோர்டன் 1 ரன்னிலும், லிவிங்ஸ்டன் 11 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
பின்னர் சூர்யகுமார் யாதவின் அபார ஃபீல்டிங்கால் ரஷித் 2 ரன்களில் ரன் அவுட்டாக, இங்கிலாந்து அணி 15.2 ஓவர்களில் 88 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்தது. இதன்பின் ஆர்ச்சர் அதிரடியாக சில சிக்ஸ், பவுண்டரிகளை அடித்தார். இறுதியாக இங்கிலாந்து அணி 103 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. இதனால் இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றதோடு, இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்திய அணி தரப்பில் அக்சர் படேல் மற்றும் குல்தீப் யாதவ் இருவரும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.