கயானா: டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் 2வது அரையிறுதி போட்டிக்கு ரிசர்வ் நாள் இல்லாதது குறித்து பாகிஸ்தான் ஜாம்பவான் இன்சமாம் உல் ஹக் கேள்வி எழுப்பியுள்ளார். அதுமட்டுமல்லாமல் இந்திய அணிக்கு ஆதரவாக ஐசிசி செயல்படுவதாகவும், ஐசிசி நிர்வாகத்தை பிசிசிஐ கட்டுக்குள் வைத்திருப்பதாகவும் விமர்சித்துள்ளார்.
டி20 உலகக்கோப்பை தொடரின் 2வது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் விளையாடுகின்றன. கயானா மைதானத்தில் நடக்கும் போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இதனிடையே கயானாவில் இன்று 70 சதவிகிதம் வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை அறிக்கை தெரிவிக்கின்றன.

ஏற்கனவே நேற்று காலை முதலே கனமழை பெய்து வந்த நிலையில், இன்றும் மழை தொடரவே அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் 2வது அரையிறுதி போட்டிக்கு ஐசிசி தரப்பில் ரிசர்வ் நாள் ஒதுக்கப்படவில்லை. முதல் அரையிறுதி போட்டிக்கு ரிசர்வ் நாள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், 2வது அரையிறுதி போட்டிக்கு கூடுதலாக 250 நிமிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனால் இந்தியா - இங்கிலாந்து அணிகள் விளையாடும் போட்டி மழையால் தாமதமானாலும், கூடுதலாக 250 நிமிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த போட்டியில் முடிவு எட்டப்படுவதற்கு குறைந்தது 10 ஓவர்களாவது இரு அணிகளும் விளையாட வேண்டும் என்று தெரிய வந்துள்ளது. இருந்தாலும் ரிசர்வ் நாள் ஒதுக்கப்படாதது ஏன் என்ற கேள்வி ரசிகர்களிடையே உள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் ஜாம்பவான் இன்சமாம் உல் ஹக் பேசி இருக்கிறார். அதில், இந்தியா - இங்கிலாந்து அணிகள் விளையாடும் 2வது அரையிறுதி போட்டிக்கு ரிசர்வ் நாள் ஒதுக்கப்படவில்லை. ஒருவேளை கனமழை காரணமாக அரையிறுதி ஆட்டம் கைவிடப்பட்டால், புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த அணி என்பதால், இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும். இந்த சம்பவத்தை ஆசியக் கோப்பை தொடருடன் ஒப்பிட வேண்டும் என்று நினைக்கிறேன்.
ஏனென்றால் ஆசியக் கோப்பையின் போது இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. இதன்பின் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் அணி முன்னிலையில் இருந்தது. அப்போது இந்தியாவுடன் பாகிஸ்தான் அணி மோதவிருந்த போட்டிக்கு திடீரென ரிசர்வ் நாள் அறிவிக்கப்பட்டது. தற்போது அதேபோல் இங்கிலாந்து அணிக்கும் சிக்கல் உண்டாகியுள்ளது. ஐசிசி நிர்வாகத்தில் 3 நாடுகள் அதிகாரம் செலுத்துவதாக கூறுகிறார்கள். 3 நாடுகள் இல்லை, ஒரே நாடு தான். அது பிசிசிஐ தான் என்று விமர்சித்துள்ளார்.