பிராவிடன்ஸ்: 2024 டி20 உலகக் கோப்பை தொடரின் இரண்டாவது அரை இறுதியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோத உள்ளன. இந்தப் போட்டி நடைபெற உள்ள பிட்ச் இந்திய அணிக்கு சாதகமாக இருக்காது என கணிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த அரை இறுதிப் போட்டி நடைபெற உள்ள கயானாவின் பிராவிடன்ஸ் மைதானத்தில் இதற்கு முன் நடந்த டி20 உலகக் கோப்பை போட்டிகளில் அதிக ரன்கள் எடுக்கப்படவில்லை. பேட்டிங்கில் அனைத்து அணிகளும் தடுமாறி உள்ளன. பவர் பிளே ஓவர்களில் இதுவரை ஆடிய அணிகளின் சராசரி 6.4 மட்டுமே. மிடில் ஓவர்களில் அது 5.5 ஆகவும். கடைசி ஓவர்களில் அது 7.6 ரன்களாகவும் இருந்துள்ளது.

இதை வைத்து பார்க்கும் போது இந்த மைதானத்தில் எந்த அணி சிறப்பாக பந்து வீசுகிறதோ அந்த அணியே வெற்றி பெறும் என்பது தெளிவாகிறது. இதே மைதானத்தில் தான் நியூசிலாந்து அணியை ஆப்கானிஸ்தான் 84 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பிட்ச் சுழற் பந்துவீச்சுக்க சாதகமாக இருக்கும் என்ற ஒரு விஷயம் இந்திய அணிக்கு நல்ல செய்தியாக உள்ளது. இந்திய அணியின் அனுபவம் வாய்ந்த ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் மற்றும் அக்சர் பட்டேல் என மூன்று சுழற் பந்துவீச்சாளர்கள் உள்ளனர்.
அதே சமயம், இங்கிலாந்து அணியிலும் அனுபவம் வாய்ந்த சுழற் பந்துவீச்சாளர்களான அதில் ரஷீத் மற்றும் மொயீன் அலி உள்ளனர். மேலும், பகுதிநேர சுழற் பந்துவீச்சாளர்களும் உள்ளனர். எனவே, இந்திய அணிக்கு அது கெட்ட செய்தியாக உள்ளது. இந்த போட்டி கயானா நேரப்படி காலை 10:30 மணிக்கு துவங்க உள்ளது. அந்த நேரத்திற்கு முன்பும் போட்டி நேரத்திலும் மழை பெய்ய அதிக வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டியை காலை 10.30 மணி முதல் மாலை 6:00 மணிக்குள் நடத்தி முடிக்க வேண்டும். அந்த மைதானத்தில் காலை முதல் மாலை வரை மழை பெய்ய உள்ளதாக வானிலை அறிக்கை கூறுகிறது. எனவே, இந்த போட்டி கைவிடப்படவே அதிக வாய்ப்பு உள்ளது. அப்படி நடந்தால் சூப்பர் 8 பிரிவில் முதல் இடத்தை பெற்ற இந்திய அணி இறுதிப் போட்டிக்கு நேரடியாக முன்னேறிவிடும்.
சூப்பர் 8 சுற்றில் இரண்டாவது பிரிவில் இரண்டாவது இடத்தை பிடித்த இங்கிலாந்து அணி அரை இறுதியுடன் வெளியேற வேண்டிய நிலைக்கு தள்ளப்படும். எனவே, மழை வந்தால் அது இந்திய அணிக்கு சாதகமான விஷயமாகவே இருக்கும். மழை பெய்யாமல் போனால் போட்டி நடைபெறும். அதை இந்திய அணிக்கு பின்னடைவாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். 2022 டி20 உலகக் கோப்பை அரை இறுதியிலும் இந்தியா மற்றும் இங்கிலாந்து மோதியது குறிப்பிடத்தக்கது. அப்போது இங்கிலாந்து அணி இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது.