பிராவிடன்ஸ்: 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி விளையாட உள்ளது. இதுவரை நடந்த குரூப் சுற்று போட்டிகளிலும், சூப்பர் 8 போட்டிகளிலும் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் பெரிய மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.
அதிகபட்சமாக அமெரிக்காவில் நடைபெற்ற குரூப் சுற்றுப் போட்டிகளில் மூன்று வேகப் பந்துவீச்சாளர்கள் வேண்டும் என்பதால், முகமது சிராஜ் பிளேயிங் லெவனில் இடம் பெற்று இருந்தார். அடுத்து சூப்பர் 8 சுற்று வெஸ்ட் இண்டீஸ்-இல் நடைபெற்றதால் முகமது சிராஜ் நீக்கப்பட்டு கூடுதல் சுழற் பந்துவீச்சாளராக குல்தீப் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டார்.

இந்த ஒரு மாற்றத்தை தவிர பிளேயிங் லெவனில் வேறு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. துவக்க வீரராக இறங்கி வரும் விராட் கோலி இதுவரை ரன் குவிக்கவில்லை என்ற போதும் அவரது பேட்டிங் ஆர்டர் கூட மாற்றப்படவில்லை. இதன் மூலம் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா அணியை மாற்றாமல் உலகக்கோப்பை முழுவதும் நிலையான அணியுடன் ஆட வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பது தெரிகிறது.
இந்த நிலையில் தான் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியின் போது இந்திய அணி அதிரடியாக ஒரு மாற்றத்தை செய்ய வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. இதுவரை ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல் மற்றும் குல்தீப் யாதவ் என மூன்று சுழற் வீச்சாளர்களுடன் களம் இறங்கிய இந்திய அணி அரை இறுதி நடைபெற உள்ள கயானா மைதானத்தில் சுழற் பந்துவீச்சு அதிகம் எடுபடும் என்பதால் நான்காவது சுழற் பந்து வீச்சாளராக சாஹலை அணியில் சேர்க்க வாய்ப்பு உள்ளது.

அவரை அணியில் சேர்த்தால் ஒரு வேகப் பந்துவீச்சாளர் அல்லது ஒரு பேட்ஸ்மேனை அணியில் இருந்து நீக்க வேண்டும். பேட்ஸ்மேன் ஒருவரை நீக்குவது ரிஸ்க் என்றாலும், அப்படி நீக்க வேண்டும் என்றால் சிவம் துபேவை நீக்கவே அதிக வாய்ப்பு உள்ளது. அதே சமயம், இதுவரை சுழற் பந்துவீச்சில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தாத ரவீந்திர ஜடேஜாவை நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக சாஹல், இந்த போட்டியில் இடம் பெறவும் வாய்ப்பு உள்ளது. எனினும், இந்த போட்டி மழையால் கைவிடப்படக் கூடும் என்ற சந்தேகம் இருப்பதால் போட்டி சூழ்நிலைக்கு ஏற்பவே இந்த மாற்றம் நடைபெறுமா? இல்லையா? என்பது தெரிய வரும்.