கயானா: 2024 டி20 உலகக் கோப்பை தொடரின் அரை இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது இந்தியா. இந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் செய்த இரண்டு பெரிய தவறுகளால் அந்த அணி தோல்வியை சந்தித்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 171 ரன்கள் குவித்தது. இந்த போட்டி நடந்த பிட்ச்சில் பந்து அதிகமாக பவுன்ஸ் ஆகவில்லை.
பந்து பிட்ச் ஆன பின் மிகவும் தாழ்வாகவே சென்றது. அப்படி இருந்தும் ரோஹித் சர்மா அபாரமாக விளையாடி 39 பந்துகளில் 57 ரன்கள் சேர்த்தார். சூர்யகுமார் யாதவ் 36 பந்துகளில் 47 ரன்கள் சேர்த்தார். ஹர்திக் பாண்டியா 13 பந்துகளில் 23 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 9 பந்துகளில் 17 ரன்களும் சேர்த்தனர். இந்த கடினமான பிட்ச்சை சமாளித்து இந்திய அணி வீரர்கள் 20 ஓவர்களில் 171 ரன்கள் சேர்த்தனர்.

அடுத்த ஆடிய இங்கிலாந்து அணி, பேட்டிங் செய்ய முடியாமல் திணறியது. குறிப்பாக இந்திய சுழற் பந்துவீச்சாளர்களின் ஓவர்களில் விக்கெட்களை வரிசையாக இழந்து பின்னர் 16.4 ஓவர்களில் 103 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக மாறியது. இதுவே அவர் செய்த முதல் தவறு. இந்த போட்டி மழைக்கு நடுவே நடைபெற்றது. போட்டிக்கு முன்னரும் நீண்ட நேரம் மழை பெய்து இருந்தது. அதனால் பிட்ச் முதல் 10 ஓவர்களுக்கு மட்டும் பேட்டிங் செய்ய ஒத்துழைத்தது. அதன் பின் பந்து வீச்சுக்கு சாதகமாக மாறியது.
இதை சரியாக கணிக்காமல் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் பந்துவீச்சை தேர்வு செய்திருந்தார். டாஸ் நிகழ்வின்போது இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, தாங்களும் முதலில் பேட்டிங் செய்யவே விரும்பியதாக குறிப்பிட்டு இருந்தார். இரண்டாம் பாதியில் பிட்ச் பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் என அவர் அப்போது கூறினார். அதே போன்றே நடந்தது.
அடுத்த இங்கிலாந்து அணி கேப்டன் செய்த இரண்டாவது தவறு சுழற் பந்துவீச்சாளர் மொயீன் அலியை பயன்படுத்தாமல் விட்டது. இந்த போட்டி நடந்த பிட்ச் சுழற் பந்துவீச்சுக்கு ஒத்துழைத்தது. ஆனால், ஜோஸ் பட்லர் முழு நேர சுழற் பந்துவீச்சாளரான அதில் ரஷித் மற்றும் பகுதிநேர சுழற் பந்துவீச்சாளரான லியாம் லிவிங்ஸ்டன் என இரண்டு சுழற் பந்துவீச்சாளர்களை மட்டுமே பயன்படுத்தினார்.
மூன்றாவதாக அனுபவம் வாய்ந்த மொயீன் அலியின் பந்துவீச்சையும் அவர் பயன்படுத்தி இருந்தால் ஒருவேளை இந்திய அணி விக்கெட்களை இழந்து தடுமாறத் தொடங்கி இருக்கக்கூடும். அதன் மூலம் இந்திய அணி குறைந்த ஸ்கோரை எடுத்து இருக்கக்கூடும். அந்த வாய்ப்பை ஜோஸ் பட்லர் தவறவிட்டார். இந்த இரண்டு காரணங்களாலேயே இங்கிலாந்து அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்தது.