கயானா: இந்திய கிரிக்கெட் வரலாற்றில் புதிய கேப்டன்சி சாதனை ஒன்றை செய்துள்ளார் ரோஹித் சர்மா. இங்கிலாந்து அணிக்கு எதிரான 2024 டி20 உலகக் கோப்பை அரை இறுதிப் போட்டியில் அவர் அபாரமாக விளையாடி 39 பந்துகளில் 57 ரன்கள் சேர்த்தார். அவரின் அபாரமான பேட்டிங்கால் இந்திய அணி 20 ஓவர்களில் 171 ரன்கள் சேர்த்தது. அடுத்து இங்கிலாந்து அணி 103 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி 68 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இந்தப் போட்டியில் 57 ரன்கள் குவித்த ரோஹித் சர்மா, இந்திய அணியின் கேப்டனாக 5000 ரன்கள் என்ற மைல் கல்லை கடந்து சாதனை படைத்து இருக்கிறார். இதற்கு முன் நான்கு இந்திய கேப்டன்கள் அனைத்துவித கிரிக்கெட் போட்டிகளிலும் சேர்த்து கேப்டனாக 5000 ரன்கள் என்ற மைல் கல்லை கடந்து இருக்கின்றனர்.

தற்போது ஐந்தாவது ரோஹித் சர்மா அந்த ஜாம்பவான்கள் பட்டியலில் இணைந்துள்ளார். இந்த பட்டியலில் விராட் கோலி முதல் இடத்தில் இருக்கிறார். அவர் 250 போட்டிகளில் 12883 ரன்கள் எடுத்துள்ளார். அடுத்த இடத்தில் தோனி இடம் பெற்றுள்ளார். அவர் 330 போட்டிகளில் 11,207 ரன்கள் எடுத்துள்ளார். மூன்றாவது இடத்தில் முகமது அசாருதீன் இடம் பெற்றுள்ளார். அவர் 230 போட்டிகளில் 8095 ரன்கள் எடுத்துள்ளார்.
சவுரவ் கங்குலி நான்காவது இடத்தில் இருக்கிறார். அவர் 218 போட்டிகளில் 7665 ரன்கள் எடுத்துள்ளார். ரோஹித் சர்மா 122 போட்டிகளில் 5033 ரன்கள் குவித்து ஐந்தாவது இடத்தில் இடம் பெற்றுள்ளார். ரோஹித் சர்மா இந்திய அணியின் கேப்டனாக இதுவரை 11 சதம் மற்றும் 30 அரை சதம் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலக அளவில் கேப்டனாக அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் ரிக்கி பாண்டிங் முதல் இடத்தில் இருக்கிறார். அவர் 324 போட்டிகளில் 15440 ரன்கள் குவித்துள்ளார். இரண்டாவது இடத்தில் தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டனாக இருந்த கிரேம் ஸ்மித் இருக்கிறார். அவர் 286 போட்டிகளில் 14878 ரன்கள் குவித்திருக்கிறார். இந்திய அணியின் கேப்டனாக இருந்த விராட் கோலி 213 போட்டிகளில் 12883 ரன்கள் குவித்து உலக அளவில் மூன்றாவது இடத்தை பிடித்து இருக்கிறார். ரோஹித் சர்மா தனது ஒட்டுமொத்த கிரிக்கெட் வாழ்வில், அனைத்து வித சர்வதேச போட்டிகளையும் சேர்த்து 19069 ரன்கள் குவித்துள்ளார். 48 சதம் மற்றும் 104 அரை சதம் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.