கயானா: டி20 உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா சிக்சர் அடித்து அரைசதத்தை எட்டியுள்ளார். விராட் கோலி, ரிஷப் பண்ட் இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த போது, கொஞ்சம் கூட அசராத ரோகித் சர்மா 36 பந்துகளில் அரைசதம் அடித்து மிரட்டியுள்ளார்.
டி20 உலகக்கோப்பை தொடரின் 2வது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடி வருகிறது. இந்த போட்டி மழை காரணமாக தாமதமாக தொடங்கப்பட்ட நிலையில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதன்பின் இந்திய அணி தரப்பில் ரோகித் சர்மா - விராட் கோலி கூட்டணி தொடக்கம் கொடுத்தது.

இதில் விராட் கோலி அட்டாக் செய்ய முயன்று 9 பந்துகளில் 9 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, அதன்பின் வந்த ரிஷப் பண்ட் 4 ரன்களில் வெளியேறினார். ஆனால் மறுமுனையில் நின்றிருந்த கேப்டன் ரோகித் சர்மா தொடக்கத்திலேயே பவுண்டரியுடன் தொடங்கி அசத்தினார். ஆர்ச்சர், டாப்லீ என்று யார் பவுலிங் செய்தாலும், ரோகித் சர்மா அசராமல் பவுண்டரி அடிக்க இந்திய அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது.
இதன்பின் சூர்யகுமாரும் அதிரடியில் இறங்க, இந்திய அணியின் ஸ்கோரை வேகமாக உயர்ந்தது. ரோகித் சர்மா தொடக்கம் முதலே விக்கெட்டை பறிகொடுக்க கூடாது என்று முடிவுடன் பேட்டிங் செய்தார். ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் ஆடியதை போல் முழுமையாக அட்டாக்கில் இறங்காமல் பவுலர்களையும், ஃபீல்ட் செட்டப்பையும் பார்த்து அதற்கேற்ப அட்டாக் செய்ய தொடங்கினார்.
குறிப்பாக லிவிங்ஸ்டன் வீசிய 11வது ஓவரில் 3 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட்டிருந்த நிலையில், கடைசி பந்தில் சிக்சரை அடித்து ரோகித் சர்மா மிரட்டினார். சிறப்பாக ஆடிய ரோகித் சர்மா 36 பந்துகளில் சிக்சர் அடித்து அரைசதத்தை எட்டினார். தொடக்கத்திலேயே விக்கெட்டுகள் சரிந்த போதும், ஒரே மனநிலையில் விளையாடி இந்திய அணியை காப்பாற்றியுள்ளார். சிறப்பாக ஆடிய அவர் 39 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இருந்தாலும் ரோகித் சர்மாவின் மிக முக்கிய இன்னிங்ஸ்களில் ஒன்றாக இது அமைந்துள்ளது.