கயானா : டி20 கிரிக்கெட்டில் இனி அட்டாக்கிங் கிரிக்கெட்டை மட்டுமே விளையாட வேண்டும் என்று தனது பாணியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா நிரூபித்துள்ளதாக ஆஸ்திரேலியா ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ்ட் பாராட்டியுள்ளார். மறுமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும், பவுலர்களை அழுத்தத்திலேயே வைத்திருக்க வேண்டும் என்றும் ரோகித் சர்மா கூறியதை கில்கிறிஸ்ட்-ம் அறிவுறுத்தியுள்ளார்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் இன்னிங்ஸ் இப்போதும் பாராட்டுகளை பெற்று வருகிறது. அந்த போட்டியில் ரோகித் சர்மா 41 பந்துகளில் 8 சிக்ஸ், 7 பவுண்டரி உட்பட 92 ரன்களை விளாசினார். சதத்தை நெருங்கிய போதும் கூட ரோகித் சர்மாவின் அதிரடி கொஞ்சம் கூட குறையவில்லை.

அதுமட்டுமல்லாமல் எதிர்முனையில் நின்றிருந்த விராட் கோலி, ரிஷப் பண்ட் உள்ளிட்ட வீரர்கள் ஆட்டமிழந்த போது, ரோகித் சர்மா தன் பாணியில் அதிரடியில் கிளப்பினார். அதேபோல் டி20 கிரிக்கெட்டில் அரைசதம், சதம் அடிப்பதை விடவும் எதிரணி பவுலர்களுக்கு அழுத்தத்தை கொடுத்து கொண்டே இருக்க வேண்டும் என்பதே முக்கியம் என்று கூறியுள்ளார்.
இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் அடிப்படையை ரோகித் சர்மா முழுமையாக உணர்ந்ததாக ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர். இந்த நிலையில் ஆஸ்திரேலியா ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ்ட் ரோகித் சர்மாவின் இன்னிங்ஸ் குறித்து பேசுகையில், ரோகித் சர்மா சரியான விளையாடியதோடு மட்டுமல்லாமல், டி20 கிரிக்கெட் குறித்து சரியான கருத்துகளையும் கூறியுள்ளார்.
இப்படிதான் நாம் விளையாட வேண்டும் என்று களத்தில் இறங்கி காட்டியுள்ளார். ஐபிஎல் தரவுகள், டி20 கிரிக்கெட்டில் ரோகித் சர்மாவின் இம்பேக்ட் என்ன என்று தொடர்ச்சியாக எழுந்த கேள்விகளுக்கு, ஒரே இன்னிங்ஸில் பதிலடி கொடுத்துள்ளார் என்று பார்க்கிறேன். ரோகித் சர்மா தலைவனாக, கேப்டனாக முன்னின்று அப்படியொரு ஆட்டத்தை வெளிப்படுத்தி இருப்பது இந்திய அணி வீரர்களுக்கும் ஊக்கத்தை அளித்துள்ளது.
ஒவ்வொரு பவுலரையும் எங்கு அடிக்க வேண்டுமோ, அதே பகுதியில் விளாசினார். எப்போது கேப்டனாக இருப்பவர்கள், போட்டியின் முடிவை விடவும் அதற்கான பிராசஸ் தான் முக்கியம் என்று கூறி கேட்டிருக்கிறோம். ஆனால் ரோகித் சர்மா, அந்த பிராசஸை வெளிப்படையாக பேசி இருக்கிறார். அது என்னவென்றால், எந்த சூழலிலும் அட்டாக்கிங் கிரிக்கெட்டை தான் விளையாட வேண்டும் என்பது தான்.
மறுமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் பிரச்சனையில்லை. அட்டாக் செய்து தொடர்ந்து விளையாடுங்கள். இதனை தலைமை பண்பின் ரோகித் சர்மா இந்திய அணியின் பிளேயிங் லெவனிலும் கடத்தி வருவதாக பாராட்டியுள்ளார். மேலும் சாதனைகளுக்காக அல்லாமல் கோப்பையை வெல்ல வேண்டும் என்று முடிவுடன் ரோகித் சர்மா இருப்பதாகவும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.