பிராவிடன்ஸ்: 2024 டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் அரை இறுதிப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இரண்டாவது அரை இறுதியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோத உள்ளன. அதில் இந்தியா வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் அரை இறுதிப் போட்டி அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. அந்த இரண்டு அணிகளும் இதுவரை டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடியது இல்லை. பல ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடி வரும் தென்னாப்பிரிக்க அணி இதுவரை எந்த ஒரு உலக கோப்பையும் வெல்லவில்லை. அதனால், அந்த அணியின் மீதும் பலருக்கும் எதிர்பார்ப்பு இருந்தது. அதை பூர்த்தி செய்யும் வகையில் அந்த அணி அரை இறுதியில் வெற்றி பெற்றது.

அடுத்து இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோத உள்ள இரண்டாவது அரை இறுதிப் போட்டியின் போது மைதானத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தப் போட்டி நேரம் மற்றும் கூடுதல் நேரம் ஆகிய நேரங்களில் மழை பெய்யும் என்பதால் போட்டி கைவிடப்பட அதிக வாய்ப்புள்ளது.
அப்படி நடந்தால் சூப்பர் 8 சுற்றின் முதல் பிரிவில் முதல் இடத்தைப் பெற்ற இந்திய அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறிவிடும். ஒருவேளை போட்டி நடந்தால் இந்திய அணியே வெற்றி பெறும் என விமர்சகர்கள் கருதுகின்றனர். ஏனெனில், இந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி இதுவரை ஆடிய அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
ஆனால், இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வி அடைந்திருந்தது. அந்த அணி அதிகபட்சமாக ஒரே ஒரு டெஸ்ட் அந்தஸ்து கொண்ட அணியை மட்டுமே வீழ்த்தி இருக்கிறது. அந்த அணியும் வெஸ்ட் இண்டீஸ் என்பது குறிப்பிடத்தப்பட்டது. எனவே, இங்கிலாந்து அணிக்கான வெற்றி வாய்ப்பு சற்று குறைவாக உள்ளது. எனவே, இறுதிப் போட்டிக்கு இந்தியா முன்னேற அதிக வாய்ப்பு உள்ளது.