கயானா: டி20 உலகக்கோப்பை தொடரின் 2வது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் விளையாடவுள்ளன. இன்று இரவு 8 மணிக்கு நடக்கும் ஆட்டத்திற்காக, இரு அணிகளின் வீரர்களும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு தயாராகி வருகின்றனர். இதனால் போட்டி மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எகிறியுள்ளது.
அதேபோல் 2022 டி20 உலகக்கோப்பை அரையிறுதியில் இங்கிலாந்து அணியிடம் அடைந்த தோல்விக்கு இந்திய அணி பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐசிசி அட்டவணையின்படி, 2வது அரையிறுதி ஆட்டம் டிரினிடாட் மைதானத்தில் தான் நடந்திருக்க வேண்டும். ஆனால் அரையிறுதி சுற்றுக்கு இந்திய அணி முன்னேறியதால், ஆட்டம் கயானா மைதானத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கயானா மைதானத்திற்கு ஆட்டம் மாற்றப்பட்டதே பின்னடைவாக மாறியுள்ளது. ஏனென்றால் கயானா வானிலை கடந்த ஒரு வாரமாகவே மோசமாக உள்ளது. நேற்று முன் தினம் முதலே கயானா மைதானம் அமைந்துள்ள பகுதியில் கனமழை பெய்து வருகிறது. நேற்று மாலை தீவிரமாக மழை பெய்த நிலையில், மைதானத்தில் முழு பகுதியில் தார்பாய் கொண்டு மூடப்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது.

இதனால் கயானா மைதானத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழைநீர் தேங்கியுள்ளது. இந்த புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மிகவும் முக்கியமான 2வது அரையிறுதி ஆட்டத்திற்கு ரிசர்வ் நாள் ஒதுக்கப்படாததால், ஆட்டம் நடக்குமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. ரிசர்வ் நாளுக்கு பதிலாக கூடுதலாக 3 மணி நேரம் மட்டுமே ஐசிசி ஒதுக்கியுள்ளது.

அதேபோல் கயானாவில் மாலை முதலே மீண்டும் மழை நிற்காமல் பெய்து வருகிறது. இதனால் மைதானத்தின் சில பகுதிகள் குளம் போல் மாறியுள்ளது. அதுமட்டுமல்லாமல் இன்று காலை கயானாவில் 70 சதவிகிதம் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை அறிக்கை வெளியாகியுள்ளது. அதேபோல் கருமேகங்கள் சூழ்ந்துள்ளதால், மழை பெய்ய தொடங்கினால், நிற்காது என்றும் அந்நாட்டு ரசிகர்கள் கூறி வருகின்றனர்.