கயானா: டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா - இங்கிலாந்து 2வது அரையிறுதி ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்பட்டு வந்த சூழலில், திடீரென மழை நின்று வெயில் அடித்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் அதிகாலையில் குளம் போல் காட்சியளித்த கயானா மைதானத்தில், தற்போது தார்பாய் அகற்றப்பட்டு போட்டிக்கு தயார் செய்யப்பட்டு வருகின்றன.
டி20 உலகக்கோப்பை தொடரின் 2வது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் விளையாடவுள்ளன. இந்த ஆட்டம் நடக்கும் கயானா மைதானம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கயானாவில் நேற்றிரவு முதலே கனமழை பெய்து வந்ததால், போட்டி நடக்குமா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்தது.

ஏனென்றால் கயானா மைதானமே குட்டி குளம் போல் காட்சியளித்தது. தொடர்ந்து அதிகாலையில் மழை பெய்ய தொடங்கியதோடு சூரிய வெளிச்சமும் வெளிவரவில்லை. இதனால் கயானா பகுதியே கருமேகங்கள் சூழ்ந்து கனமழைக்கு தயாராகியதாக கூறப்பட்டு வந்தது. இதன்பின் 8 மணியளவில் கயானாவில் மழை பெய்ய தொடங்கியது.
இதுகுறித்து பிரபல வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே தனது எக்ஸ் பக்கத்தில், இந்த மைதானத்தில் மழைநீர் வேகமாக வடிந்துவிடும் என்றாலும், தற்போது வானம் கருமையாக இருப்பதாக பதிவிட்டிருந்தார். குறைந்தது 10 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடத்துவதற்கு 1.50 மணி வரை நேரம் இருப்பதால், ஆட்டம் நடக்கும் என்று எதிர்பார்ப்பதாக கூறியிருந்தார்.

இந்த நிலையில் மற்றொரு வர்ணனையாளரான தினேஷ் கார்த்திக், ஒருவழியாக சூரிய வெளிச்சம் நன்றாக வெளி வந்துவிட்டது. அதேபோல் மைதானத்தை மூடப்பட்டிருந்த தார்பாயும் அகற்றப்பட்டுவிட்டது என்று வீடியோ வெளியிட்டுள்ளார். இதனால் இந்தியா - இங்கிலாந்து இடையிலான ஆட்டம் நடக்கும் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.