கயானா: டி20 உலகக்கோப்பை தொடரின் 2வது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் விளையாடவுள்ளன. இந்த போட்டியின் போது மழை பெய்வதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில், ஆட்டம் நடக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் ரிசர்வ் நாள் இருக்கிறதா, ஆட்டம் கைவிடப்பட்டால் என்ன நடக்கும் என்பதை பார்க்கலாம்.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அரையிறுதி சுற்று போட்டிகள் நாளை நடக்கவுள்ளது. முதல் அரையிறுதி போட்டியில் தென்னாப்பிரிக்கா - ஆஃப்கானிஸ்தான் அணிகள் மோதின. இதனைத் தொடர்ந்து 2வது அரையிறுதிப் போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் விளையாடுகின்றன. இதில் முதல் அரையிறுதிப் போட்டி நாளை காலை 6 மணிக்கு நடக்கவுள்ளது.

இதன்பின் 2வது அரையிறுதி ஆட்டம் நாளை இரவு 8 மணிக்கு நடக்கவுள்ளது. கயானா நேரப்படி காலை 10 மணிக்கு ஆட்டம் நடக்கவுள்ளது. இந்திய போட்டிகளை முன் கூட்டியே காலை நேரப்படி நடத்த ஐசிசி திட்டமிட்டிருந்தது. கயானா மைதானத்தை பொறுத்தவரை இதுவரை இந்திய அணி 3 போட்டிகளில் விளையாடிய அனுபவத்துடன் உள்ளது.
இந்த 3 போட்டிகளில் 2ல் வெற்றியும், ஒன்றில் தோல்வியும் அடைந்துள்ளன. இங்கிலாந்து அணியை பொறுத்தவரை ஒரு போட்டியில் விளையாடி தோல்வியை சந்தித்துள்ளது. இந்த நிலையில் பலம் வாய்ந்த இரு அணிகளும் அரையிறுதியில் விளையாடவுள்ளது ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் ஆட்டம் நடக்குமா என்ற சந்தேகமும் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
ஏனென்றால் கயானா வானிலை நிலவரம் போட்டி நடக்குமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று கயானாவில் 90 சதவிகிதம் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ள நிலையில், நாளை காலை 60 சதவிகிதம் வரை வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இன்று கனமழை பெய்யும் பட்சத்தில் திட்டமிட்டபடி போட்டியை சரியான நேரத்தில் தொடங்குவதும் சந்தேகம் என்று தெரிய வந்துள்ளது. இருந்தாலும் நேற்று வானிலை நிலவரம் சரியாகும் என்று நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.
ஏனென்றால் நேற்று 86 சதவிகிதம் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்ட நிலையில், இன்று அது 60 சதவிகிதமாக குறைந்துள்ளது. இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு ரிசர்வ் நாளும் அறிவிக்கப்படவில்லை. கூடுதலாக 250 நிமிடங்கள் வரை ஐசிசி நேரம் ஒதுக்கியுள்ளது. ஒருவேளை மழை காரணமாக ஆட்டம் கைவிடப்பட்டால், இந்திய அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்று தெரிய வந்துள்ளது. சூப்பர் 8 சுற்றில் முதலிடம் பிடித்துள்ளதாக், இந்திய அணிக்கு இந்த சாதகம் கிடைத்துள்ளது.