பிராவிடன்ஸ்: 2024 டி20 உலகக் கோப்பை தொடரின் அரை இறுதி சுற்றுக்கு இந்திய அணி முன்னேறி உள்ளது. இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை சந்திக்க உள்ளது இந்தியா. இந்த போட்டி கயானா நாட்டில் உள்ள பிராவிடன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் வியாழன் அன்று இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது.
இந்தப் போட்டி நடைபெற உள்ள நேரத்தில் மழை பெய்யக் கூடும் என வானிலை முன்னறிவிப்பு வெளியாகி உள்ளது. போட்டிக்கு முன்பு சுமார் மூன்று மணி நேரத்திற்கு 60 சதவீதம் அளவுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல போட்டி நேரத்தின் போது இடையிடையே மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இந்த நிலையில் இந்த அரை இறுதி போட்டி மழையால் கைவிடப்பட்டால் என்ன நடக்கும்? இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறுமா? என்ற சந்தேகம் அனைவருக்கும் எழுந்துள்ளது. இதில் ஒரு அரை இறுதிக்கு மட்டுமே ரிசர்வ் நாள் இருப்பதும் பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
தென்னாப்பிரிக்கா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோத உள்ள முதல் அரை இறுதிப் போட்டிக்கு மட்டும் ரிசர்வ் நாள் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்தப் போட்டி வெஸ்ட் இண்டீஸ் நேரப்படி இரவு 8.30 மணிக்கு துவங்க உள்ளது. போட்டி நேரத்தை தாண்டி 60 நிமிடங்கள் கூடுதல் நேரம் ஒதுக்கப்படும். அதே நாளில் அந்த குறிப்பிட்ட நேரத்திற்குள் போட்டி முடியாவிட்டால், அதற்கு அடுத்த நாள் ரிசர்வ் நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று 190 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்படும். அதற்குள் போட்டியை நடத்தி முடிக்க வேண்டும்.
அதே சமயம், இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோத உள்ள அரை இறுதிப் போட்டிக்கு ரிசர்வ் நாள் ஒதுக்கப்படாவிட்டாலும் 250 நிமிடங்கள் கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இந்தப் போட்டி வெஸ்ட் இண்டீஸ் நேரப்படி காலை 10 மணிக்கு துவங்க இருப்பதால் போட்டி நேரத்தை தாண்டி கூடுதலாக 250 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதன்படி இரண்டு அரை இறுதி போட்டிகளுக்கும் சரிசமமாக 250 நிமிடங்கள் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. முதல் அரை இறுதி இரவு நேரத்தில் நடப்பதால் முதல் நாள் 60 நிமிடங்களும், அதற்கு அடுத்த நாள் 190 நிமிடங்களும் கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆக மொத்தம் இரண்டு அரை இறுதிக்கும் 250 நிமிடங்கள் மட்டுமே கூடுதலாக வழங்கப்பட உள்ளது.
இந்த நிலையில் இந்தியா - இங்கிலாந்து அரை இறுதிப் போட்டி மழையால் கைவிடப்பட்டால் சூப்பர் 8 சுற்றில் எந்த அணி தனது பிரிவில் முதலிடத்தில் இருந்ததோ அது இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். அந்த வகையில் சூப்பர் 8 சுற்றின் முதல் பிரிவில் இந்திய அணி முதல் இடத்தில் இருந்தது. இரண்டாவது பிரிவில் இங்கிலாந்து அணி இரண்டாவது இடத்தில் இருந்தது. எனவே, போட்டி கைவிடப்பட்டால் சூப்பர் 8 சுற்றில் தனது பிரிவில் முதல் இடத்தில் இருந்த இந்திய அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல முதல் அரை இறுதிப் போட்டி மழையால் கைவிடப்பட்டால் இரண்டாவது பிரிவில் முதல் இடத்தில் இருந்த தென்னாப்பிரிக்கா அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறிவிடும். எனினும், மழையை தாண்டி இந்த இரண்டு போட்டிகளும் கூடுதல் நேரத்தில் நடத்தி முடிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் உள்ளது. இந்த அரை இறுதிப் போட்டிகள் ஓவர்கள் குறைக்கப்பட்டு நடத்தப்பட்டால், குறைந்தபட்சம் இரண்டு அணிகளும் தலா பத்து ஓவர்கள் பேட்டிங் செய்திருக்க வேண்டும் என்ற விதியும் இதில் உள்ளது. 250 நிமிடங்கள் கூடுதல் நேரம் இருப்பதால் இரண்டு போட்டிகளும் கைவிடப்படாது என்றே விமர்சகர்கள் கருதுகின்றனர். .