கயானா: டி20 உலகக்கோப்பை தொடரின் 2வது அரையிறுதி போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டி கயானா மைதானத்திற்கு மாற்றப்பட்டது ஏன் என்று புரியாமல் ரசிகர்கள் குழம்பியுள்ள நிலையில், கனமழை பெய்து வருவதால் ஆட்டம் கைவிடப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி சுற்றின் 2வது போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டி கயானா மைதானத்திற்கு மாற்றப்பட்டது குறித்து பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. ஏனென்றால் இரு அரையிறுதி ஆட்டங்களும் டிரினிடாட் மைதானத்தில் நடத்துவதாகவே ஐசிசி திட்டமிட்டிருந்தது. ஆனால் திடீரென 2வது அரையிறுதி ஆட்டம் கயானா மைதானத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் கடந்த சில ஐசிசி தொடர்களில் ரிசர்வ் நாள் என்பது கட்டாயமாக்கப்பட்டிருந்தது. ஆசியக் கோப்பை தொடரில் கூட இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்திற்கு திடீரென ரிசர்வ் நாள் கொண்டு வரப்பட்டது. ஆனால் ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரின் மிகமுக்கியமான 2வது அரையிறுதி ஆட்டத்திற்கு ரிசர்வ் நாள் ஒதுக்கப்படவில்லை.
அதற்கு மாறாக, ஐசிசி தரப்பில் கூடுதல் நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணம் குறித்து ஐசிசி இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. கயானா மைதானம் அமைந்துள்ள பகுதிகளுக்கு கனமழை எச்சரிக்கை அளிக்கப்பட்டும் கூட, ஐசிசி எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மைதானத்தில் மாற்ற முடியாது என்பது ஏற்றுக் கொள்ள முடியும் என்றாலும், ரிசர்வ் நாள் ஒதுக்காதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் கயானா பிட்சில் ஆஃப்கானிஸ்தான் - தென்னாப்பிரிக்கா ஆட்டம் நடக்க வேண்டியதாக இருந்தது. ஆனால் இந்திய அணி ஆட்டம் கயானாவிற்கு மாற்றப்பட்டதால், பயிற்சி கூட எடுக்காமல் தென்னாப்பிரிக்கா அணியுடன் ஆஃப்கானிஸ்தான் அணி அரையிறுதியில் விளையாடியுள்ளது.
இந்திய ரசிகர்கள் மனதில் வைத்தும், ஒளிபரப்பாளர்களின் கோரிக்கையை ஏற்றும் இந்தியா - இங்கிலாந்து போட்டி கயானா மைதானத்திற்கு மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் எந்த மைதானத்தில் இந்திய அணி விளையாடினாலும் பகல் போட்டியாகவே ஐசிசி நடத்தும். இதனால் கயானா மைதானத்தை விடவும் வேறு மைதானத்தில் போட்டியை நடத்த ஏன் ஐசிசி முனைப்பு காட்டவில்லை என்று கேள்வி எழுந்துள்ளது.
ஒருவேளை இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது அரையிறுதி ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்டால், இங்கிலாந்து மட்டுமல்லாமல் மற்ற நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் கண்டனம் தெரிவிக்கும். அதேபோல் இங்கிலாந்து மட்டுமல்லாமல் ஆஸ்திரேலியா முன்னாள் வீரர்களும் பிசிசிஐ மற்றும் ஐசிசி நிர்வாகத்தை கடுமையாக விமர்சிப்பார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.