நியூயார்க் : அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு காரணம் அர்ஷ்தீப் சிங் எடுத்த முதல் 2 விக்கெட்கள் தான் என கேப்டன் ரோஹித் சர்மா கூறினார்.
இந்தியா - அயர்லாந்து அணிகள் மோதிய 2024 டி20 உலகக் கோப்பை தொடரின் குரூப் ஏ சுற்றுப் போட்டியில் இந்திய அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.

அப்போது மூன்றாவது ஓவரில் இரண்டு விக்கெட்களை வீழ்த்தி அயர்லாந்து அணியின் விக்கெட் வீழ்ச்சியை தொடங்கி வைத்தார் இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங். அதன்பின் ஹர்திக் பாண்டியா, பும்ரா, அக்சர் பட்டேல், சிராஜ் என பிற பந்துவீச்சாளர்களும் விக்கெட் வேட்டை நடத்தினர்.
எனினும், அவற்றுக்கு அச்சாரமாக இருந்தது அர்ஷ்தீப் சிங்கின் அந்த இரண்டு விக்கெட்கள் தான். இந்த போட்டியில் அயர்லாந்து அணி 96 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்திய அணி 12.2 ஓவர்களிலேயே 97 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்திய அணியின் எளிதான வெற்றிக்கு பின் பேசிய கேப்டன் ரோஹித் சர்மா, "இந்த பிட்ச்சில் நாங்கள் என்ன எதிர்பார்ப்பது என்று எங்களுக்கு தெரியவில்லை. இது ஐந்து மாதமே ஆன பிட்ச். இது பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தது. நாங்கள் இரண்டாவதாக பேட்டிங் செய்த போதும் பிட்ச் அதே போலத் தான் இருந்தது. எங்கள் பந்து வீச்சாளர்களுக்கு போதுமான ஒத்துழைப்பு கிடைத்தது. அதை சரியாக பயன்படுத்த வேண்டும் என எதிர்பார்த்தோம். சரியான நீளத்தில் தொடர்ந்து பந்து வீச வேண்டும். எங்கள் அணியின் பந்துவீச்சாளர்கள் அனைவரும் டெஸ்ட் கிரிக்கெட் ஆடுபவர்கள் என்பதால் அதை சரியாக செய்தார்கள். அர்ஷ்தீப் சிங் மட்டும்தான் டெஸ்ட் கிரிக்கெட் ஆடியதில்லை. ஆனால், அவரது இரண்டு விக்கெட் தான் இந்த போட்டியின் தொனியை எங்களுக்கு சாதகமாக அமைத்தது" என்று கூறினார் ரோஹித் சர்மா.
இதன் மூலம் அர்ஷ்தீப் சிங் ஒரே ஓவரில் வீழ்த்திய முதல் 2 விக்கெட்கள் தான் இந்திய அணியின் வெற்றிக்கு அச்சாரமாக அமைந்தது என அவர் சுட்டிக்காட்டி இருக்கிறார்.