நியூயார்க் : 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கில் பட்டையை கிளப்பினார். பேட்டிங் செய்ய கடினமான பிட்ச்சில் மற்ற பேட்ஸ்மேன்கள் எல்லாம் திணறிய நிலையில் அவர் அரைசதம் அடித்தார்.
அவர் பீல்டிங் செய்த போது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டு வலி இருந்தது. அந்த நிலையிலும் அவர் 10 ஓவர்கள் வரை களத்தில் நின்று 37 பந்துகளில் 52 ரன்கள் குவித்தார்.

இந்த போட்டி நடந்த நியூயார்க் மைதானத்தின் பிட்ச் பேட்டிங் செய்ய ஒத்துழைக்கவில்லை. அந்தப் பிட்ச்சில் இரண்டு விதமான பவுன்ஸ் இருந்தது. அதனால், அயர்லாந்து வீரர்களும் பேட்டிங் செய்ய திணறினர். 96 ரன்களுக்கு அந்த அணி ஆல் அவுட் ஆனது. இதற்கு முன் இதே மைதானத்தில் நடந்த தென்னாப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகள் மோதிய போட்டியிலும் இதே தான் நடந்தது. அந்தப் போட்டியில் இலங்கை அணி 77 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி இருந்தது. தென்னாப்பிரிக்கா அணி நான்கு விக்கெட்களை இழந்த பின்பே 78 ரன்கள் என்ற சிறிய இலக்கை எட்டியது.
இந்த நிலையில் இந்த மைதானத்தின் அவுட் - ஃபீல்டும் மோசமாக இருந்தது. நல்ல அவுட் ஃபீல்டு என்றால் பந்து வேகமாக உருண்டு சென்று பவுண்டரி எல்லையை அடைய வேண்டும். ஆனால், இந்த அவுட் ஃபீல்டில் பந்தை அடித்தால் வேகம் குறைந்து பாதியில் நின்று விடுகிறது. இந்த நிலையிலும் ரோஹித் சர்மா அதிரடி ஆட்டம் ஆடினார்.
அவர் முதல் இரண்டு ஓவர்களில் 11 பந்துகளில் 18 ரன்கள் சேர்த்தார். இரண்டாவது ஓவரில் ஒரு ஃபோர், ஒரு சிக்ஸ் அடித்து தனது அதிரடி ஆட்டத்தை அவர் துவக்கினார். அதன்பின் விராட் கோலி ஐந்து பந்துகளை சந்தித்து ஒரு ரன்னில் ஆட்டம் இழந்த போதும் ரோஹித் சர்மா தனது அதிரடியை கை விடவில்லை.
தொடர்ந்து அதிரடி ஆட்டம் ஆடிய அவர் 37 பந்துகளில் 52 ரன்கள் சேர்த்து இருந்தார். அப்போது அவருக்கு தோள்பட்டையில் ஏற்பட்ட வலியின் காரணமாக ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் வெளியேறினார். அதன் பின் சூர்யகுமார் யாதவ் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். நிதானமாக ஆடி வந்த ரிஷப் பண்ட் ரோஹித் ஆட்டமிழந்த பின் அதிரடியாக ஆடி 36 ரன்கள் சேர்த்து அணியை வெற்றி பெற வைத்தார். இந்திய அணி 12.2 ஓவர்களில் 97 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.