நியூயார்க் : பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 119 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன நிலையில் அதற்கு முக்கிய காரணமே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் சிவம் துபே மற்றும் ரவீந்திர ஜடேஜா தான் எனக் கூறி சில ரசிகர்கள் அவர்களை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
2024 டி20 உலகக் கோப்பை தொடரின் குரூப் ஏ பிரிவில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. விராட் கோலி 4 ரன்களிலும், ரோஹித் சர்மா 13 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். மூன்று ஓவர்களிலேயே இரண்டு முக்கிய விக்கெட்களை இழந்தது இந்திய அணி.

அடுத்து ரிஷப் பண்ட் மற்றும் அக்சர் பட்டேல் இணைந்து ஓரளவு ரன் சேர்த்து ஆட்டம் இழந்தனர். ரிஷப் பண்ட் 42 ரன்கள் சேர்த்தார். ஆனால் அதன் பின் சூர்யகுமார் யாதவ் 7 ரன்களில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார். சிவம் துபே வழக்கம் போல ஒரு பந்தை கூட சரியாக அடிக்க முடியாமல் திணறினார். அவர் 9 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தார்.
அடுத்து ரவீந்திர ஜடேஜா தான் சந்தித்த முதல் பந்திலேயே கேட்ச் கொடுத்து டக் அவுட் ஆகி வெளியேறினார். இதை அடுத்து ரசிகர்கள் இது சிவம் துபே மற்றும் ரவீந்திர ஜடேஜாவை குறி வைத்து விமர்சனம் செய்தனர். தோனி சில போட்டிகளில் குறைந்த ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடி இருப்பார். அதை எல்லாம் எடுத்துச் சுட்டிக்காட்டி அதே வழியில் வந்த வீரர்கள் என சிஎஸ்கேவை சேர்ந்த சிவம் துபே மற்றும் ரவீந்திர ஜடேஜாவை விமர்சனம் செய்தனர்.
"சிஎஸ்கே ரத்தம்.. இப்படித்தான் இருக்கும்" என்றும், "சிஎஸ்கே வீரர்கள் எப்போதும் குறைவான ஸ்ட்ரைக் ரேட்டில் தான் ஆடுவார்கள்" என்றும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்திய அணி இந்தப் போட்டியில் 119 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. சிஎஸ்கேவை சேர்ந்த சிவம் துபே மற்றும் ரவீந்திர ஜடேஜா மட்டுமின்றி விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் உள்ளிட்ட முக்கிய வீரர்களும் ஒற்றை இலக்கத்தில் தான் ஆட்டம் இழந்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.