நியூயார்க் : பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம், விராட் கோலியின் கால் செருப்புக்கு கூட சமமாக மாட்டார் என டேனிஷ் கனேரியா பேசி இருக்கிறார். 2024 டி20 உலகக் கோப்பை தொடர் நியூயார்க் மற்றும் வெஸ்ட் இண்டீஸ்-இல் நடைபெற்று வருகிறது.
இந்த தொடரில் பாகிஸ்தான அணி மிக மோசமான துவக்கத்தை பெற்றது. கத்துக்குட்டி அணியான அமெரிக்க அணியிடம் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்து இருந்தது. இந்த தொடருக்கு முன் தங்கள் சொந்த மண்ணில் அயர்லாந்து அணியிடம் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்து இருந்தது.

இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் தான் இந்த தோல்விகளுக்கு முக்கிய காரணம் என கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக பாபர் அசாம் ரன் குவித்தாலும் மிகவும் நிதானமாக ஆடி அணியின் தோல்விக்கு காரணமாகி வருகிறார். அதை பலரும் சுட்டிக்காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா, இந்தியா - பாகிஸ்தான் போட்டி குறித்து பேசினார். அப்போது, "பாபர் அசாம் ஒரு நாள் சதம் அடித்தால், அதற்கு அடுத்த நாள் அவரை விராட் கோலி உடன் ஒப்பிட்டு பேசுவதை நாம் பார்க்கலாம். ஆனால், அவர் விராட் கோலியின் செருப்புக்கு கூட சமமாக மாட்டார்" என்றார் டேனிஷ் கனேரியா.
மேலும், அமெரிக்க அணிக்கு எதிராக பாபர் அசாம் 43 பந்துகளில் 44 ரன்கள் எடுத்தது பற்றி குறிப்பிட்டார். "அமெரிக்க பவுலர்கள் அவரை ரன் குவிக்க விடாமல் செய்தார்கள். அந்த பவுலர்களுக்கு எதிராக கூட அவரால் சரியாக விளையாட முடியவில்லை. அவர் சரியாக 40 ரன்கள் எடுத்தவுடன் ஆட்டம் இழந்தார். அவர் அந்த போட்டியில் கடைசி வரை நின்று அணிக்கு வெற்றி தேடி கொடுத்து இருக்க வேண்டும். அந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி ஒருதலைப் பட்சமாக வெற்றி பெற்று இருக்க வேண்டும்" என்றார் டேனிஷ் கனேரியா.
மேலும், "பாகிஸ்தான் அணி ஒரு நகைச்சுவை. அவர்கள் டி20 உலகக் கோப்பை வெல்ல வேண்டும் என்ற தீவிரமான மனநிலையில் இல்லை. அவர்கள் அமெரிக்காவில் தங்கள் குடும்பத்தினருடன் சுற்றுலா சென்று இருக்கிறார்கள். பாபர் அசாம், விராட் கோலிக்கு அருகே எங்கேயும் நிற்கவில்லை. அவரை ஒப்பிடவே முடியாது" என்றார் டேனிஷ் கனேரியா.