நியூயார்க் : 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணி விளையாடிய போது முன்னாள் பாகிஸ்தான் வீரர் கம்ரான் அக்மல், இந்திய வீரர் அர்ஷ்தீப் சிங்கின் மத நம்பிக்கை குறித்து மோசமான வார்த்தைகளை பேசியதாக கூறப்படுகிறது. அதற்கு ஹர்பஜன் சிங் கடும் பதிலடி கொடுத்துள்ளார்.
அந்தப் போட்டியின் போது இந்திய அணி இரண்டாம் பாதியில் மிக சிறப்பாக பந்து வீசி வந்தது. கடைசி மூன்று ஓவர்களை இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர்களே வீசுவார்கள் என கருதப்பட்ட நிலையில் அர்ஷ்தீப் சிங்குக்கு கடைசி ஓவர் கொடுக்கப்பட்டது. ஆனால் அதற்கு முன் கம்ரான் அக்மல் தனது வர்ணனையில், மணி 12க்கு மேல் ஆகிவிட்டது. இனி சீக்கியரான அர்ஷ்தீப் சிங்குக்கு ஓவர் கொடுத்தால் பாகிஸ்தான் வீரர்கள் அடித்து விடுவார்கள் என்று கிண்டல் அடிக்கும் வகையில் கூறினார்.

சீக்கியர்களுக்கும் இரவு 12 மணிக்கும் மிகப்பெரிய வரலாற்று தொடர்பு ஒன்று உள்ளது. அதை கிண்டல் அடிக்கும் வகையில் கம்ரான் அக்மல் பேசியிருந்தார். அர்ஷ்தீப் சிங் பற்றி அவர் கூறியது இதுதான் - "கடைசி ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசப் போகிறார். அவரது பந்துவீச்சை நிச்சயம் அடித்து விடுவார்கள். ஏனெனில், மணி 12 மணிக்கு மேல் ஆகிவிட்டது. 12 மணிக்கு மேல் எந்த சீக்கியருக்கும் வாய்ப்பு அளிக்கக் கூடாது" என்றார் கம்ரான் அக்மல்.
அவரது அந்தப் பேச்சு சீக்கியர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கம்ரான் அக்மலுக்கு முன்னாள் இந்திய வீரர் ஹர்பஜன் சிங் கடும் பதிலடி கொடுத்தார். ஹர்பஜன் சிங் பேசுகையில், "உன்னை லட்சம் முறை சபிக்கிறேன் கம்ரான் அக்மல். உனது நாற்றமெடுக்கும் வாயை திறக்கும் முன் நீ சீக்கியர்களின் வரலாறு பற்றி தெரிந்து கொண்டு பேசியிருக்க வேண்டும். சீக்கியர்கள் தான் உனது தாய் மற்றும் சகோதரிகளை எதிரிகளிடமிருந்து காப்பாற்றினார்கள். அப்போது மணி இரவு 12. உன்னை நினைத்து அவமானப்படுகிறேன். கொஞ்சமாவது நன்றி உணர்வுடன் இரு" என்று கூறி இருக்கிறார்.
இந்த சீக்கிய வரலாறு அவுரங்கசீப் காலத்தை சேர்ந்தது. முகலாய மன்னரான அவுரங்கசீப் அப்போது இந்திய பெண்களை கடத்தி வைத்திருந்தார். அவர்களை அடிமைகளாகவும் விற்று வந்தார். அப்போது அவர்களை காப்பாற்றுவதற்காக ரகசியமாக ஒரு சீக்கிய படை உருவானது. அவுரங்கசீப்பின் படை மிகப் பெரியதாக இருந்ததால் மிகச் சிறிய இந்த சீக்கிய படை இரவு நேரங்களில் மட்டும் ரகசியமாக படை எடுத்து இந்திய பெண்களை மீட்கும் பணியில் ஈடுபட்டது.
அதனால், ஒவ்வொரு நாள் இரவிலும், "சீக்கியர்கள் 12 மணிக்கு வேட்டையை ஆரம்பிப்பார்கள்" என இந்தியர்களும். "சீக்கியர்கள் 12 மணிக்கு நம்மை தாக்குவார்கள்" என முகலாயர்களும் கூறி வந்தனர். அது காலப்போக்கில் சீக்கியர்களை கிண்டல் செய்வதற்கான ஒரு விஷயமாக மாறிவிட்டது. அதுதான் இங்கேயும் நடந்துள்ளது. கம்ரான் அக்மல் அதை வைத்து கிண்டல் செய்த நிலையில் ஹர்பஜன் சிங் பொங்கி எழுந்து இருக்கிறார்.