நியூயார்க் : 2024 டி20 உலகக் கோப்பையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வரும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையேயான போட்டிக்கு முன்னதாக பாகிஸ்தான் அணிக்கு பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
அந்த அணியின் முக்கிய ஆல் - ரவுண்டரான இமாத் வாஸிம் உலகக் கோப்பை தொடரில் இருந்தே நீக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. வருக்கு காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவரை பாகிஸ்தான் அணி நீக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதே சமயம், இந்திய அணிக்கு எதிரான போட்டி முக்கியமானது என்பதால் வலி நிவாரணி அளித்து அவரை போட்டியில் பங்கேற்க வைக்க முயற்சிகள் நடந்து வருகிறது.

சில ஆண்டுகளாக பாகிஸ்தான் டி20 அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வந்தார் இமாத் வாஸிம். அதனால் மனமுடைந்த நிலையில் இருந்த அவர், சில மாதங்கள் முன்பு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். பின்னர் டி20 உலக கோப்பை தொடருக்கு முன்பாக அவரிடம் பேசிய பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு அதிகாரிகள் அவரது ஓய்வை திரும்ப பெற்றுக் கொள்ள வைத்தனர்.
பின்னர் அவர் 2024 டி20 உலக கோப்பைக்கான பாகிஸ்தான் அணியில் சேர்க்கப்பட்டார். அவர் பாகிஸ்தான் அணியின் முக்கிய ஆல் - ரவுண்டராக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. அவர் கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் பல ஆண்டுகளாக விளையாடி வருகிறார். அதனால் உலகக்கோப்பை நடக்கும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் மைதானங்கள் குறித்து அவருக்கு அதிக அனுபவம் உள்ளது.
இந்த நிலையில் அவருக்கு போட்டியின் போது காயம் ஏற்பட்டது. அவர் அடுத்து நடக்க உள்ள இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் பங்கேற்பது சந்தேகம் என முதலில் தகவல் கிடைத்தது. பின்னர் முக்கியமான போட்டி என்பதால் அவருக்கு வலி நிவாரணி மாத்திரைகள் மற்றும் ஊசிகளை போட்டு இந்திய அணிக்கு எதிரான போட்டியில் மட்டும் பங்கேற்க வைக்க பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு திட்டமிட்டுள்ளது. மேலும் இந்திய அணிக்கு எதிரான போட்டி முடிந்தவுடன் அவரை பாகிஸ்தானுக்கு அனுப்பவும் முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.