கராச்சி : 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போது முன்னாள் பாகிஸ்தான் வீரர் கம்ரான் அக்மல் வர்ணனையின் போது இந்திய வீரர் அர்ஷ்தீப் சிங் குறித்து பேசுகையில் சீக்கியர்களை கிண்டல் செய்யும் வகையில் சில வார்த்தைகளை பேசினார்.
அதை கேட்டு கொதித்துப் போன இந்திய வீரர் ஹர்பஜன் சிங் சமூக வலை தளத்தில் கம்ரான் அக்மலை கடுமையாக கண்டித்து இருந்தார். சீக்கியர்களின் வரலாறு தெரியாமல், அவமானப்படுத்தும் வகையில் பேசியதை சுட்டிக்காட்டி, உன் தாய் மற்றும் சகோதரிகளை சீக்கியர்கள் காப்பாற்றினார்கள் என்ற நன்றி உணர்வுடன் இருக்க வேண்டும் என கூறி இருந்தார். இந்த விவகாரத்தில் தன் தவறை உணர்ந்த கம்ரான் அக்மல் தற்போது ஹர்பஜன் சிங் மற்றும் சீக்கியர்களிடம். மன்னிப்பு கேட்டு இருக்கிறார்.

முன்னதாக இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில், பாகிஸ்தான் அணி கடைசி ஓவரில் 18 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இருந்தது. அர்ஷ்தீப் சிங் பந்து வீசுவார் என எதிர்பார்க்கப்பட்டது. அப்போது கம்ரான் அக்மல் வர்ணனையின் போது, "இப்போது மணி 12 ஆகிவிட்டது. 12 மணிக்கு மேல் சீக்கியர்கள் எந்த வேலையும் செய்ய மாட்டார்கள். எனவே, அர்ஷ்தீப் சிங் பந்து வீசினால் அவர் ஓவரில் பாகிஸ்தான் வீரர்கள் ரன் அடித்து விடுவார்கள்" என்றார்.
அவர் கூறிய "12 மணி" என்பது முகலாய மன்னர் அவுரங்கசீப் காலத்தில் சீக்கியர்கள் நடத்திய ராணுவ தாக்குதல் குறித்த வரலாறு ஆகும். அப்போது அவுரங்கசீப் இந்திய பெண்களை கடத்தி சிறையில் அடைத்து வைத்திருந்தார். சீக்கியர்கள் ஒரு சிறிய படையை உருவாக்கி இரவு நேரங்களில் அவுரங்கசீப்பின் பெரிய படைகளைத் தாண்டி அந்த பெண்களை மீட்டு வந்தார்கள்.
அதனால், அந்த காலத்தில் இருந்து, "12 மணி ஆகிவிட்டால் சீக்கியர்கள் படை எடுப்பார்கள்" என்ற சொலவடை உருவானது அது நாளடைவில் சீக்கியர்களை கிண்டல் செய்வதற்கான ஒரு விஷயமாக மாறிவிட்டது. அதைத்தான் கம்ரான் அக்மல் செய்திருந்தார். அதை கேட்டு கொந்தளித்த ஹர்பஜன் சிங், "சீக்கியர்களின் வரலாறு தெரியாமல் பேசக்கூடாது. அவர்கள் உனது தாய் மற்றும் சகோதரிகளை தான் காப்பாற்றினார்கள். கொஞ்சமாவது நன்றி உணர்வுடன் இருக்க வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த நிலையில் கம்ரான் அக்மல் தனது சமூக வலைத்தள பக்கத்தில் இந்த விவகாரத்துக்கு மன்னிப்பு கேட்டு ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், "நான் கூறிய வார்த்தைகளுக்காக ஹர்பஜன் சிங் மற்றும் சீக்கியர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். எனது வார்த்தைகள் சரியானவை அல்ல. அவை மரியாதை குறைவாக இருந்தது. நான் உலகம் முழுவதும் இருக்கும் சீக்கியர்கள் மீது அதிக மரியாதை வைத்துள்ளேன். யாரையும் காயப்படுத்தும் நோக்கில் அதை நான் கூறவில்லை. உண்மையாகவே வருந்துகிறேன்" என பதிவிட்டு இருக்கிறார்.