நியூயார்க் : 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான முக்கியமான போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் வரிசையை மாற்றி குழப்பத்தை ஏற்படுத்தினார் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்.
இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணிக்கு துவக்க வீரர்களாக இறங்கிய விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா பெரும் ஏமாற்றம் அளித்தனர். விராட் கோலி 4 ரன்கள் எடுத்த நிலையில் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து ரோஹித் சர்மா 12 பந்துகளில் 13 ரன்கள் மட்டும் எடுத்து ஆட்டம் இழந்தார்.

அடுத்து ரிஷப் பண்ட் களத்தில் இருந்த நிலையில் நான்காம் வரிசையில் சூர்யகுமார் யாதவ் பேட்டிங் இறங்கி இருக்க வேண்டும். ஆனால், மூன்றாவது ஓவரிலேயே இரண்டு விக்கெட் விழுந்து விட்டதால், அக்சர் பட்டேலை பேட்டிங் செய்ய அனுப்பி வைத்தார் பயிற்சியாளர் ராகுல் டிராவிட். இது பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியது.
இந்திய அணியில் துவக்க வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு அடுத்து ஒரு இடது கை பேட்ஸ்மேன் மற்றும் ஒரு வலது கை பேட்ஸ்மேன் என்ற அடிப்படையில் பேட்டிங் ஆர்டரை தீர்மானித்து அணித் தேர்வு நடந்துள்ளது. அதன்படி ரிஷப் பண்ட் இடது கை பேட்ஸ்மேன் என்பதால் திட்டப்படி வலது கை பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் களத்துக்கு வந்திருந்தால் அது பாகிஸ்தான் அணிக்கு பந்துவீச்சில் சவாலை அளித்திருக்கும்.
மாறாக இடது கை பேட்ஸ்மனான ஆல் ரவுண்டர் அக்சர் பட்டேல் களத்துக்கு வந்தார். இவர் எந்த அளவுக்கு அதிரடியாக ஆட முடியும் என்ற கேள்வியும் அனைவருக்கும் இருந்தது. எதிர்பார்த்தது போலவே அக்சர் பட்டேல் 18 பந்துகளில் 20 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தார். மேலும், அக்சர் பட்டேல் ஒவ்வொரு பந்தையும் கணித்து ஆட முடியாமல் திணறிக் கொண்டிருந்தார். அது எதிரில் நின்றிருந்த ரிஷப் பண்டுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியது. அவரும் தொடர்ந்து தவறான ஷாட்களை ஆடிக் கொண்டிருந்தார். இரண்டு முறை கேட்ச் வாய்ப்பில் இருந்து தப்பித்தார் ரிஷப் பண்ட்.
அக்சர் பட்டேல் ஆட்டம் இழந்து சென்ற பின் மொத்த இந்திய அணியின் பேட்டிங் வரிசையும் சரிந்தது. சூர்யகுமார் யாதவ் 7, சிவம் துபே 3, ஹர்திக் பாண்டியா 7, ரவீந்திர ஜடேஜா 0, பும்ரா 0 என இந்திய அணி விக்கெட்களை இழந்தது. 119 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.