நியூயார்க் : பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி மிக மோசமாக ஆடி தனது விக்கெட்டை பறி கொடுத்தார். அவர் ஆட்டம் இழந்த விதத்தைப் பார்த்து இந்திய ரசிகர்கள் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள்.
2024 டி20 உலகக் கோப்பை தொடரில் குரூப் "ஏ" பிரிவில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நியூயார்க் நகரின் நாசா கவுண்டி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா துவக்கம் அளித்தனர்.

முதல் ஓவரை சந்தித்த ரோஹித் சர்மா அந்த ஓவரில் ஒரு சிக்ஸ் அடித்தார். அந்த ஓவரில் மொத்தம் எட்டு ரன்கள் கிடைத்தது. பின்னர் மழையால் போட்டி தடைப்பட்டு, சற்று தாமதமாக மீண்டும் துவங்கியது. அப்போது நசீம் ஷா வீசிய இரண்டாவது ஓவரின் மூன்றாவது பந்தில் விராட் கோலி மோசமான ஷாட் ஒன்றை அடித்தார்.
அப்போது நசீம் ஷா ஷார்ட் பந்து வீசினார். அது அவுட்சைட் ஆஃப் திசையில் வந்தது. அது ஒரு மோசமான பந்து தான். ஆனால், விராட் கோலி அதை சரியாக டைமிங் செய்யவில்லை. பந்தை பாயிண்ட் திசையில் அடித்தார் கோலி. அங்கு ஃபீல்டர் உஸ்மான் கான் நின்று இருந்தார். விரட்ட கோலி அடித்த பந்து நேராக உஸ்மான் கான் கைகளுக்கே சென்றது. முக்கிய விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் நசீம் ஷா துள்ளித் குதித்தார். இந்த முக்கியமான போட்டியில் விராட் கோலி ஆட்டம் இழந்த விதம் இந்திய ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
இதை எடுத்து விராட் கோலி 3 பந்துகளில் 4 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தார். இந்த விக்கெட்டுக்கு முன்பு வரை விராட் கோலி பாகிஸ்தான் அணிக்கு எதிராக 308 ரன்கள் என்ற பேட்டிங் சராசரி வைத்திருந்தார். அதாவது அவர் பாகிஸ்தான் அணிக்கு எதிராக டி20 உலக கோப்பை போட்டிகளில் அதிக முறை நாட் அவுட் ஆக ஆடி இருந்தார். அதன் காரணமாக அவரது பேட்டிங் சராசரி மிக அதிகமாக இருந்தது. தற்போது அவர் அவுட் ஆகிவிட்டதால் அந்த பேட்டிங் சராசரி வெகுவாக சரிந்து விடும்.
அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் கோலி 1 ரன்னில் ஆட்டமிழந்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. விராட் கோலி சென்ற பின் ரோஹித் சர்மா 12 பந்துகளில் 13 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். இந்திய அணி 2.4 ஓவர்களில் 19 ரன்கள் இழந்து தவித்தது. அடுத்து அக்சர் பட்டேல் மற்றும் ரிஷப் பண்ட் ரன் குவித்து அணியை மீட்டனர்.