நியூயார்க் : இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 2024 டி20 உலகக் கோப்பை தொடரின் குரூப் போட்டி இன்று நியூயார்க் நகரில் நடைபெற உள்ளது. இந்த போட்டி முழுமையாக நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த போட்டி நியூயார்க் நேரப்படி காலை 10:30-க்கு துவங்க உள்ளது. அந்த நேரத்தில் அங்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை அறிக்கை வெளியாகி உள்ளது. இரண்டு நாட்கள் முன்பு வெளியான வானிலை அறிக்கையில் போட்டி நேரமான காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை 50 சதவீதம் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு இருந்தது. தற்போது அந்த அறிக்கையில் ஒரு சிறிய மாற்றம் மட்டும் நடந்துள்ளது.

தற்போது வெளியாகி உள்ள அறிக்கையின்படி 10 மணி முதல் 12 மணி வரை 45 சதவீத மழை பெய்ய வாய்ப்புள்ளது. 12 மணி முதல் 2 மணி வரை 20 முதல் 35 சதவீதம் மழை பெய்ய வாய்ப்புள்ளது. மதியம் 2 மணிக்கு மேல் 40 சதவீதம் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
எப்படியும் போட்டி நேரத்திற்கு முன் அல்லது போட்டி நேரத்தில் மழை பெய்யும் என கூறப்படுகிறது. அதனால் போட்டி திட்டமிட்டபடி 40 ஓவர்களும் முழுமையாக நடைபெறுவதும் சந்தேகம்தான். சில ஓவர்கள் குறைக்கப்பட்டு போட்டி நடத்த வாய்ப்பு உள்ளது. அதனால் இந்த போட்டியை முழுமையாக பார்க்கலாம் என காத்திருந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணியின் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.
மழை பெய்தால் நிச்சயமாக பிட்ச்சில் மாறுதல்கள் ஏற்படும். அது பேட்டிங் செய்யும் அணியை அதிகம் பாதிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போதைய சூழ்நிலையில் இந்திய அணி வலுவான அணியாக கருதப்படுகிறது. பாகிஸ்தான் அணியைப் பொறுத்த வரை உலகக் கோப்பை தொடருக்கு முன் அயர்லாந்து அணியிடம் தோல்வி அடைந்தது. பின்னர் உலகக் கோப்பையில் அமெரிக்க அணியிடம் தோல்வி அடைந்தது. சிறிய அணிகளிடம் தோல்வி அடைந்து துவண்டு போய் உள்ளது பாகிஸ்தான். இந்த நிலையில் மழையால் ஏற்படும் பிட்ச் மாற்றம் அந்த அணிக்கு சாதகமாக மாறுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.