நியூயார்க் : இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியின் மூத்த வீரரான ரவீந்திர ஜடேஜாவுக்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
2024 டி20 உலகக் கோப்பைக்கான அணியில் ரவீந்திர ஜடேஜா முதன்மை சுழற் பந்துவீச்சாளராக இடம்பெற்றார். அவர் பேட்டிங்கிலும் அணிக்கு கை கொடுப்பார் என்பதால் ஏழாம் வரிசை பேட்ஸ்மேன் ஆகவும் இருக்கிறார். எனினும், கேப்டன் ரோஹித் சர்மா அவருக்கு பந்து வீச்சில் போதிய முக்கியத்துவம் அளிக்கவில்லை.

உலகக்கோப்பை தொடருக்கு முன் நடந்த பயிற்சி போட்டியில் வங்கதேச அணிக்கு எதிராக இந்திய அணியில் எட்டு பந்துவீச்சாளர்கள் பந்து வீசினர். அதில் ரவீந்திர ஜடேஜாவுக்கு கடைசியாக இரண்டு ஓவர்கள் பந்து வீச வாய்ப்பு அளிக்கப்பட்டது. அவர் அதில் 11 ரன்கள் விட்டுக் கொடுத்தார். விக்கெட் வீழ்த்தவில்லை.
அடுத்து உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் முதல் போட்டியில் அயர்லாந்து அணிக்கு எதிராக ஜடேஜாவுக்கு ஆறாவது பந்து வீச்சாளராகவே வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதிலும் ஒரே ஒரு ஓவர் மட்டுமே வீசினார் ஜடேஜா. அதேசமயம் மற்றொரு சுழற் பந்துவீச்சாளரான அக்சர் பட்டேலுக்கு அதிக வாய்ப்பு அளிக்கப்பட்டது. அவர் அந்தப் போட்டியில் மூன்று ஓவர்கள் வீசி இரண்டு விக்கெடுகள் வீழ்த்தி இருந்தார்.
இந்த நிலையில், கேப்டன் ரோஹித் சர்மா பந்து வீச்சில் ரவீந்திர ஜடேஜாவுக்கு முக்கியத்துவம் தராதது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை ரவீந்திர ஜடேஜாவை சூப்பர் 8 சுற்றில் அணியில் இருந்தே நீக்க இவ்வாறு செய்கிறாரா? என்றும் சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால், அதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு.
தற்போது இந்திய அணி தனது குரூப் சுற்று போட்டிகளை அமெரிக்காவில் விளையாடி வருகிறது. இங்கு உள்ள பிட்ச் வேகப் பந்துவீச்சுக்கு சாதகமாக உள்ளது. அடுத்து சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ்-இல் தனது போட்டிகளை விளையாடும். அப்போது அங்கு சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான பிட்ச் இருக்கும். எனவே, அப்போது ரவீந்திர ஜடேஜா இந்திய அணியில் முக்கிய பங்காற்றுவார். எனவே அவரை அணியில் இருந்து நீக்க வாய்ப்பில்லை என்பது தான் உண்மை.