பிரிட்ஜ்டவுன்: 2024 டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணி 34 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்த நிலையில் ஐந்தாம் வரிசையில் விக்கெட் விழாமல் ரன் குவிக்க வேண்டி அக்சர் பட்டேல் அனுப்பப்பட்டார். அவர் ஆல் ரவுண்டர் என்ற நிலையில் சிறப்பாக பேட்டிங் ஆடினார்.
ஒரு பக்கம் விராட் கோலி நிதானமாக ரன் சேர்க்க, மறுபுறம் அக்சர் பட்டேல் சிக்ஸர்களை விளாசி அதிரடியாக ரன் குவித்து வந்தார். அவர் அரை சதத்தை நெருங்கிய நிலையில் மிக மோசமான ஒரு விஷயத்தை செய்தார். 14 வது ஓவரின் மூன்றாவது பந்தை விராட் கோலி அடித்தார். அப்போது சிங்கிள் ரன் ஓடுவதற்காக அக்சர் பட்டேல் வேகமாக மறுமுனையில் இருந்து ஓடி வந்தார். ஆனால், விக்கெட் கீப்பர் டி காக் பந்தை பிடித்து விட்டதால் மீண்டும் நான் ஸ்ட்ரைக்கர் முனைக்கு திரும்ப ஓடினார் அக்சர்.

அவர் அப்போது சற்று நிதானமாகவே ஓடினார். எப்படியும் டி காக்-ஆல் பந்தை தூரத்தில் இருந்து வீசி ரன் அவுட் ஆக்க முடியாது என்ற நம்பிக்கையில் சற்று நிதானமாக திரும்பி ஓடினார். ஆனால், டி காக் துல்லியமாக பந்தை வீசினார். அக்சர் பட்டேல் கிரீசை எட்டுவதற்கு முன்பே வந்து ஸ்டம்ப்புகளை தகர்த்தது. அக்சர் பட்டேல் 47 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார். அவர் நான்கு சிக்ஸர்களை அடித்து இருந்தார்.
அக்சர் பட்டேல் இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டார் என்பது ஒரு புறம் இருந்தாலும், உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் சோம்பேறித்தனமாக ரன் ஓடியது விமர்சனத்திற்கு உள்ளானது. பலரும் அது ஒரு சோம்பேறி ஓட்டம் என விமர்சனம் செய்தனர். ஆஸ்திரேலியா வீரர்கள் இறுதிப் போட்டிகளில் விளையாடினால் மிகவும் ஆக்ரோஷமாகவும், வேகமாகவும் இருப்பார்கள். ஒவ்வொரு பந்தும் மிகவும் முக்கியம் என்ற எண்ணத்துடன் இருப்பார்கள்.
2023 ஒரு நாள் போட்டி உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் நாம் அதை பார்த்து இருப்போம். அதேபோன்ற மனநிலையுடனே அக்சர் படேல் உள்ளிட்ட இந்திய வீரர்கள் ஆடி இருக்க வேண்டும். ஆனால், 34 ரன்களுக்கு மூன்று விக்கெட்களை இழந்தது மட்டுமின்றி அக்சர் பட்டேல் நன்றாக ஆடி வந்த நிலையில் சோம்பேறித்தனமாக ஓடி விக்கெட்டை இழந்தது சரியல்ல என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
அடுத்து வந்த சிவம் துபே 16 பந்துகளில் 27 ரன்கள் சேர்த்தார். விராட் கோலி 59 பந்துகளில் 76 ரன்கள் சேர்த்தார். இதை அடுத்து இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அக்சர் பட்டேல் மட்டுமே அதிக சிக்ஸர்கள் அடித்தார். ஒருவேளை அவர் கடைசி நான்கு ஓவர்களில் களத்தில் நின்று இருந்தால், அதிக சிக்ஸர்களை அடித்து இருக்கக்கூடும். அது இந்திய அணியின் ஸ்கோரை இன்னும் கூட உயர்த்தி இருக்கும்.