பிரிட்ஜ்டவுன்: 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் ரவீந்திர ஜடேஜாவின் ஃபார்ம் குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் தனியாக கவலைப்பட்டு வருகின்றனர். ஐபிஎல் தொடரின் வரவுக்கு பின் இந்திய அணியில் இடம் பெற்று இருக்கும் வீரர்களை தனித்தனியாக பிரித்து அந்தந்த வீரர்களின் ஐபிஎல் அணிகளை சேர்ந்த ரசிகர்களும் பின்பற்றி வருகிறார்கள்.
ஒரு வீரர் சரியாக செயல்படவில்லை என்றால் அவர் சார்ந்த ஐபிஎல் அணியை, மற்ற அணிகளின் ரசிகர்கள் விமர்சிப்பதும் வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. அந்த வகையில் ரவீந்திர ஜடேஜா இந்த உலகக்கோப்பை தொடரில் சரியாக ஆடாததால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை, மற்ற ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்திய அணியில் இடம் பெற்றுள்ள மற்றொரு சிஎஸ்கே வீரரான சிவம் துபேவும் சரியாக ஆடாததால் கடந்த சில போட்டிகளில் அவரை கடுமையாக விமர்சனம் செய்து இருந்தனர். எனினும், சிவம் துபேவுக்கு பேட்டிங் ஆடும் வாய்ப்பாவது கிடைக்கிறது. ஆனால், ஜடேஜாவுக்கு முதல் 5 போட்டிகளில் மொத்தமே ஐந்து ஓவர்கள் தான் பந்து வீச வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தது. மேலும், பேட்டிங்கிலும் அவருக்கு ஒன்று அல்லது இரண்டு வாய்ப்புகள் தான் சரியாக அமைந்தது.
தனக்கு கிடைத்த வாய்ப்பிலும் அவர் ரன் குவிக்காமல் இருந்தார். இந்த நிலையில் அரை இறுதியில் அவர் 9 பந்துகளில் 17 ரன்கள் எடுத்து இந்திய அணியின் ஸ்கோர் உயர காரணமாக இருந்தார். மேலும் அந்தப் போட்டியில் இந்திய அணியில் அதிக ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடிய பேட்ஸ்மேன் அவர்தான் என்பதும் ஒரு நல்ல விஷயமாக அமைந்தது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான அந்த அரை இறுதியில் ஜடேஜாவுக்கு விக்கெட் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால், மூன்று ஓவர்களில் 16 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து கட்டுக்கோப்பாக பந்து வீசி இருந்தார். இதே போன்ற ஒரு செயல்பாட்டை அவர் இறுதிப் போட்டியிலும் இந்திய அணிக்கு வழங்க வேண்டும் என சிஎஸ்கே ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர்.
குறிப்பாக, பேட்டிங்கில் ஜடேஜாவை நம்ப முடியாத நிலையே உள்ளது. சில சமயம் அவர் அதிரடியாக ஆடி யாரும் எதிர்பாராத வகையில் அணியின் ஸ்கோரை கடைசி இரண்டு ஓவர்களில் உயர்த்துவார். ஆனால், சேஸிங்கில் ஒரு ஓவருக்கு 10 ரன் எடுக்க வேண்டும் என்ற நிலை இருந்தால், பவுண்டரி அடிக்காமல் திணறிக் கொண்டிருப்பார். அவரை எந்த சூழ்நிலையில் நம்புவது, எந்த சூழ்நிலையில் நம்ப முடியாது என்பது குழப்பமான ஒன்றுதான். ஆனால் இதே ரவீந்திர ஜடேஜா தான் 2023 ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில் கடைசி இரண்டு பந்துகளில் ஒரு சிக்ஸ் மற்றும் ஒரு ஃபோர் அடித்து சிஎஸ்கே அணிக்கு கோப்பை வென்று கொடுத்தார். எனவே இந்த இறுதிப் போட்டியிலும் இந்திய அணிக்கு ஜடேஜா உலகக்கோப்பை வென்று தரவேண்டும் என சிஎஸ்கே ரசிகர்கள் மட்டுமின்றி இந்திய ரசிகர்களும் எதிர்பார்த்து உள்ளனர்.