பிரிட்ஜ்டவுன்: 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் மூன்று முக்கிய பேட்ஸ்மேன்கள் வரிசையாக விக்கெட்களை இழந்து வெளியேறியதைப் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். குறிப்பாக ரிஷப் பண்ட் மோசமான ஷாட் அடித்து அவுட் ஆனதைப் பார்த்து நொந்து போனார்கள். உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் கூட இப்படியா ஆடுவீர்கள்? என இந்திய ரசிகர்கள் ரிஷப் பண்ட் மற்றும் சூர்யகுமார் யாதவை விளாசி வருகின்றனர்.
இந்த போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. அது இந்திய அணிக்கு சாதகமான ஒன்றாக பார்க்கப்பட்டது. இது பேட்டிங் பிட்ச் என்பதால் இந்திய அணி பெரிய அளவில் ரன் குவிக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இந்த நிலையில் முதல் ஓவரிலேயே 15 ரன்கள் எடுக்கப்பட்டது. விராட் கோலி முதல் ஓவரில் மூன்று ஃபோர் அடித்திருந்தார். ஆனால், அடுத்த ஓவரில் இந்திய அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

கேஷவ் மகாராஜ் வீசிய இரண்டாவது ஓவரில் ரோஹித் சர்மா இரண்டு ஃபோர் அடித்தார். ஆனால், அதன் பின் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த ரிஷப் பண்ட் தான் சந்திதாஹ் இரண்டாவது பந்தில் ஸ்வீப் ஷாட் ஆட முயன்று மிக மோசமாக பந்தை எட்ஜ் செய்து விக்கெட் கீப்பரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். அதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இரண்டாவது பந்தை சந்திக்கும் ஒரு பேட்ஸ்மேன் நிதானமாக ஆடலாமே, எதற்காக ரிஸ்க்கான ஷாட்கள் ஆன ஸ்வீப் போன்றவற்றை முயற்சி செய்ய வேண்டும் என கேள்வி எழுப்பினர். மேலும், ரிஷப் பண்ட் டி20 போட்டிகளுக்கு தகுதியானவரே இல்லை. அவரை டெஸ்ட் அணியில் மட்டும் தக்கவைத்துக் கொண்டு, டி20 அணியில் இருந்து நீக்க வேண்டும் என கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ரிஷப் பண்ட் இதே உலகக் கோப்பை தொடரின் குரூப் சுற்று போட்டிகளில் ரன் சேர்த்து இருந்தார். ஆனால், முக்கியமான அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டியில் அவர் ஏமாற்றம் அளித்திருக்கிறார்.
அடுத்து வந்த உலகின் நம்பர் 1 டி20 பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் இந்திய அணியை காப்பாற்றுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அவரும் மூன்று ரன்கள் எடுத்த நிலையில் தேவையே இல்லாமல் வெளியே சென்ற பந்தை சிக்ஸ் அடிக்க முயன்று கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அதுவும் தேவையற்ற ஷாட் தான். இந்திய அணி பவர் பிளே ஓவர்களில் அதிரடியாக ரன் குவிக்க வேண்டும் என்ற மனநிலையில் வரிசையாக மூன்று விக்கெட்களை பறிகொடுத்தது. 34 ரன்களுக்கு மூன்று விக்கெட்கள் பறிபோன நிலையில், ஐந்தாம் வரிசையில் சிவம் துபேவுக்கு பதிலாக அக்சர் பட்டேல் அனுப்பப்பட்டார். அக்சர் பட்டேல் மற்றும் விராட் கோலி அதன் பின் ரன் சேர்த்து அணியை கரை சேர்த்தனர்.