பார்படாஸ்: இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் ஓய்வை அறிவித்தது குறித்து துணை கேப்டன் ஹர்திக் பாண்டியா கருத்து தெரிவித்துள்ளார். இந்திய அணியின் ஜாம்பவான்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரையும் மிஸ் செய்வோம் என்று கூறிய ஹர்திக் பாண்டியா, அவர்களுக்கு எங்களால் அளிக்கப்பட்ட சிறந்த ஃபேர்வெல் இது என்று கூறியுள்ளார்.
டி20 உலகக்கோப்பை தொடரை 2வது முறையாக வென்று இந்திய அணி புதிய வரலாறு படைத்துள்ளது. தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் கிட்டத்தட்ட தோல்விக்கு அருகில் சென்ற இந்திய அணி, ஹர்திக் பாண்டியா வீசிய ஒரே ஓவரில் மீண்டெழுந்தது. கிளாசனின் விக்கெட்டை வீழ்த்திய பின்னரே இந்திய அணிக்கும், ரசிகர்களுக்கும் உயிர் வந்தது என்றே சொல்லலாம்.

முதல் ஓவரில் 10 ரன்களை விட்டுக் கொடுத்த ஹர்திக் பாண்டியா, அடுத்த 2 ஓவர்களில் மொத்தமாகவே 2 ரன்களை தான் விட்டுக் கொடுத்தார். ஆனால் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணிக்கு டி20 உலகக்கோப்பையை வென்று கொடுத்துள்ளார். இந்த நிலையில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் ஓய்வை அறிவித்துள்ளனர்.
இதனால் அடுத்த கேப்டனாக இந்திய அணியை ஹர்திக் பாண்டியா வழிநடத்துவார் என்று பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் வெற்றிக்கு பின் ஹர்திக் பாண்டியா பேசுகையில், 2026 டி20 உலகக்கோப்பையை பற்றி சிந்திக்க இன்னும் நேரம் இருக்கிறது. ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவருக்காகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஏனென்றால் இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் வீரர்களாக இருக்கும் அவர்கள், இந்த வெற்றிக்கும் கொண்டாட்டத்திற்கும் தகுதியானவர்கள்.
கடந்த சில ஆண்டுகளாக அவர்கள் இருவருடன் தொடர்ந்து பயணித்து விளையாடி வருவது அற்புதமாக அனுபவம். நிச்சயம் எதிர்காலத்தின் அவர்கள் இருவரையும் மிஸ் செய்வோம். ஆனால் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவருக்கும் எங்களால் சிறந்த ஃபேர்வெல்லை கொடுக்க முடிந்துள்ளது. உலகக்கோப்பையை வென்றது மிகச்சிறந்த உணர்வை கொடுக்கிறது. இதனை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை.
கடைசி ஓவரில் எனது கைகளில் ஆட்டம் வந்து நின்றது. இந்திய அணியின் நம்பிக்கையை காப்பாற்றியது மகிழ்ச்சியாக உள்ளது. நான் எப்போதும் கடவுளை நம்புவேன். கடந்த சில மாதங்களாக ஏராளமான விஷயங்கள் என்னை பற்றி கூறப்பட்டு வந்தது.. என்னை பற்றி எதுவும் தெரியாதவர்கள் கூட அதிகமாக பேசினார்கள்.. எனது வாழ்க்கை ஒரு கட்டத்தில் அவர்களுக்கான பதிலடியாக இருக்கும் என்று நம்பினேன். அது நடந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.