பிரிட்ஜ்டவுன்: இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தனக்கு ரிவர்ஸ் ஸ்விங் எப்படி வேலை செய்கிறது என்பதை குறித்து சொல்லித் தர வேண்டிய அவசியம் இல்லை என பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் கடுமையாக பதிலடி கொடுத்து இருக்கிறார்.
2024 டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான அணி குரூப் சுற்றுடன் வெளியேறியது. இந்த நிலையில் முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் சிலர் இந்திய அணி மட்டும் குரூப் சுற்று, சூப்பர் 8 சுற்று ஆகியவற்றில் ஒரு தோல்வி கூட அடையாமல் தொடர்ந்து வெற்றி பெற்றதை வைத்து இந்திய அணி ஏமாற்று வேலை செய்வதாக அப்போது சீண்டி வருகின்றனர்.

அந்த வகையில் இன்சமாம் மறைமுகமாக இந்திய அணி பந்தை சேதப்படுத்தி, 15 வது ஓவரிலேயே ரிவர்ஸ் ஸ்விங் செய்வதாக குற்றம் சுமத்தி இருந்தார். 15 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட பந்து எப்படி ரிவர்ஸ் ஆகும்? என சந்தேகத்தை எழுப்பி இருந்தார். அந்தக் சந்தேகத்தை நிருபர் ஒருவர் ரோஹித் சர்மாவிடம் எழுப்பினார். அதற்கு பதில் அளித்த இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, "எந்த சூழ்நிலையில் பந்து ரிவர்ஸ் ஆகிறது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். கடும் சூரிய வெப்பம் இருக்கும் நிலையில், வறண்ட பிட்ச்களில் பந்து ரிவர்ஸ் ஆகிறது. நாங்கள் மட்டும் பந்தை ரிவர்ஸ் ஸ்விங் செய்யவில்லை. அனைத்து அணிகளும் செய்கின்றன" என அவர் விளக்கம் அளித்தார்.
அந்த விளக்கத்தை கேட்டு கோபமடைந்த இன்சமாம் உல் ஹக் இதற்கு பதிலடி கொடுத்தார். "முதலில் ஒரு விஷயத்தை நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். ரோஹித் சர்மா பந்து ரிவர்ஸ் ஆவதை ஒப்புக் கொண்டிருக்கிறார். எனவே, நாம் அதை சரியாக கண்டுபிடித்து இருக்கிறோம். இரண்டாவது, ரோஹித் சர்மா எப்படி ரிவர்ஸ் ஸ்விங் ஆகிறது, எந்த அளவு சூரிய வெப்பத்தில், எது போன்ற பிட்ச்களில் ரிவர்ஸ் ஸ்விங் ஆகும் என்றெல்லாம் எங்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. பந்தை ரிவர்ஸ் ஸ்விங் செய்வதை உலகுக்கு சொல்லிக் கொடுத்தவர்களுக்கு நீங்கள் பாடம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. இப்படி எல்லாம் பேசக்கூடாது என ரோஹித் சர்மாவிடம் கூறுங்கள்" என்று கடுமையாக பேசினார்.
மேலும், "ரோஹித் சர்மாவிடம் கேட்ட நிருபர் தவறான கேள்வியை கேட்டு இருக்கிறார். நான் அம்பயர்கள் தங்கள் கண்களை திறந்து வைக்க வேண்டும் என்றும், பந்து எப்படி ரிவர்ஸ் ஆகிறது என்பதை அவர்கள் பார்க்க வேண்டும் என்றும் தான் கூறினேன். இப்பொழுதும் நான் அதையே தான் சொல்கிறேன். அம்பயர்கள் தங்கள் கண்கள் மற்றும் மனதைத் திறந்து வைக்க வேண்டும்." என்றார். இதன் மூலம் மீண்டும் இந்திய அணி பந்தை சேதப்படுத்துவாகக் கூறி இன்சமாம் உல் ஹக் இந்திய அணி மீது மீண்டும் குற்றம் சுமத்தி இருக்கிறார்.