பார்படாஸ்: ஃபிஃபா உலகக்கோப்பையை வென்ற பின் அர்ஜெண்டினா கேப்டன் மெஸ்ஸி எப்படி ஸ்டைலாக குதித்து கொண்டே நடந்து வந்து கோப்பையை வாங்கினாரோ, அதேபோல் நாமும் வாங்க வேண்டும் என்று இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு, சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் திட்டம் போட்டு கொடுத்தது தெரிய வந்துள்ளது.
ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரை அர்ஜெண்டினா அணி வென்றது. அர்ஜெண்டினா அணியின் கேப்டனான மெஸ்ஸி கொஞ்சம் கூடுதல் உற்சாகத்துடன் குதித்து கொண்டே மித வேகத்தில் நடந்து வந்து கோப்பையை பெற்று கொண்டார். மெஸ்ஸி அவ்வாறு கோப்பையை பெற்ற ஸ்டைல் இன்று வரை ரசிகர்களால் மீண்டும் மீண்டும் பார்க்கப்பட்டு வருகிறது.

ஐபிஎல் தொடரின் கேகேஆர் அணி கோப்பையை வென்ற போதும் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், மெஸ்ஸியை போல் தான் கோப்பையை பெற்றுக் கொண்டார். இந்த நிலையில் டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி த்ரில் வெற்றியை பெற்றது.
விராட் கோலி, அக்சர் படேல் ஆகியோரின் பேட்டிங், சூர்யகுமார் யாதவின் கேட்ச், ஹர்திக் பாண்டியாவின் கடைசி 2 ஓவர்கள், பும்ரா மற்றும் அர்ஷ்தீப் சிங் பவுலிங், ரோகித் சர்மா கேப்டன்சி, சிவம் துபேவின் கேமியோ என்று இந்திய அணி வீரர்கள் அனைவரும் இணைந்து கோப்பையை வென்றுள்ளனர். இதனால் எமோஷனலான அனைவரும் கண்ணீருடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.
இதன்பின் ஐசிசி தலைவர் மற்றும் ஜெய் ஷா ஆகியோரின் கைகளில் கோப்பையை வாங்க வந்த கேப்டன் ரோகித் சர்மா, மெஸ்ஸியின் ஐகானிக் நடையை போல் வந்து கோப்பையை பெற்று கொண்டார். ஆனால் ரோகித் சர்மா மெஸ்ஸியின் நடைக்கு பதிலாக, WWE புகழ் ரிக் பிளையரின் நடையை போல் நடந்து வந்து கொண்டாடியதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
இதனிடையே ரோகித் சர்மாவிடம் கோப்பையை எப்படி பெற வேண்டும் என்று குல்தீப் யாதவ் திட்டம் போட்டு கொடுத்துள்ளது தெரிய வந்துள்ளது. மேடையில் நின்றிருந்த தீவிர கால்பந்து ரசிகரான குல்தீப் யாதவ், மெஸ்ஸியின் நடையை போல் செய்து காட்டி பாடம் எடுத்து கொண்டிருந்தார். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.