பிரிட்ஜ்டவுன்: இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோத உள்ள 2024 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி நடக்க உள்ள பிட்ச் குறித்த சில தகவல்கள் வெளியாகி உள்ளன. அது இந்திய அணிக்கு சாதகமாக இருக்காது என கூறப்படுகிறது. பார்படோஸ் நாட்டில் உள்ள பிரிட்ஜ் டவுன் மைதானத்தில் இந்த இறுதிப் போட்டி நடைபெற உள்ளது. இந்த உலகக் கோப்பையில் இந்த மைதானத்தில் இதுவரை எட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.
தென்னாப்பிரிக்கா அணி இந்த மைதானத்தில் ஒரு போட்டியில் கூட ஆடவில்லை என்பது இந்திய அணிக்கு சாதகமாக அமைந்துள்ளது. அதே சமயம், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இந்தியா இதே மைதானத்தில் விளையாடி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. அந்தப் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 181 ரன்கள் எடுத்து இருந்தது. அது இந்திய அணிக்கு சாதகம் தான் என்றாலும் இறுதிப்போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள பிட்ச் சற்று சிக்கலாக அமைந்துள்ளது.

இந்தியா - தென்னாப்பிரிக்கா இறுதிப் போட்டிக்கு நான்காம் எண் பிட்ச் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த உலகக் கோப்பையில் இந்த நான்காம் எண் பிட்ச்சில் இதுவரை இரண்டு போட்டிகள் நடத்தப்பட்டன. அதில் ஒன்று இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி. அந்த போட்டியில் ஒரு ஓவர் கூட வீசப்படாத நிலையில் மழையால் போட்டி கைவிடப்பட்டது.
அடுத்து நமீபியா மற்றும் ஓமன் அணிகளுக்கு இடையேயான போட்டி இந்த பிட்ச்சில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் இரண்டு அணிகளும் குறைந்த ஸ்கோர் எடுத்ததோடு இரு அணிகளும் போட்டியை டை செய்தன. போட்டி சூப்பர் ஓவர் வரை சென்றது. இதை வைத்து பார்க்கும் போது இந்த பிட்ச் நிச்சயமாக அதிக ரன்கள் குவிக்க சாதகமாக இருக்காது என கருதப்படுகிறது.
இந்த பிட்ச்சை தேர்வு செய்ததன் மூலம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இந்திய அணிக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. முன்னதாக 2023 ஒருநாள் போட்டி உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி பிட்ச்சை தன் விருப்பத்துக்கு ஏற்ப மாற்றிக் கொண்டதாக சர்ச்சைகள் எழுந்து இருந்த நிலையில் தற்போது இந்திய அணிக்கு சாதகமாக இல்லாத ஒரு பிட்ச் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது.
இந்த மைதானத்தில் வேகப் பந்துவீச்சாளர்களே இந்த உலகக் கோப்பையில் அதிக விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார்கள். தென்னாப்பிரிக்கா அணி வேகப் பந்துவீச்சில் பலமான அணியாக இருப்பதால் அது இந்தியாவுக்கு பின்னடைவாக அமைந்துள்ளது. இந்த மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்யும் அணிகளே அதிக அளவில் வெற்றி பெற்றுள்ளன. இங்கு இதுவரை நடந்த 50 சர்வதேச டி20 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணி 31 முறை வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதே உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியிலும் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தே வெற்றி பெற்று இருந்தது. எனவே, இந்த போட்டியில் டாஸ் மிகவும் முக்கிய பங்கு வகிக்க உள்ளது. இந்திய அணி டாஸ் வென்றால் நிச்சயம் பேட்டிங்கை தேர்வு செய்ய வேண்டும்.