பிரிட்ஜ்டவுன்: 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் இறுதிப் போட்டியில் மோத உள்ளன. இந்தப் போட்டி பார்படோஸ் நகரில் உள்ள பிரிட்ஜ்டவுன் மைதானத்தில் நடைபெற உள்ளது. அங்கு உள்ள பிட்ச் பேட்டிங் செய்ய சாதகமாக இருக்கும் என்பதால் இந்த இறுதிப் போட்டியில் இரு அணிகளும் அதிக ரன்கள் குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் எந்தெந்த வீரர்கள் இடம் பெறுவார்கள்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இது பேட்டிங் பிட்ச் என்பதால் இந்திய அணி கூடுதல் பந்துவீச்சாளர் ஒருவரை நீக்கிவிட்டு அந்த இடத்தில் சஞ்சு சாம்சனை களம் இறக்கக் கூடும் என்ற பேச்சும் அடிபடுகிறது. இதற்கு முன் இந்திய அணி இதே மைதானத்தில் நடந்த சூப்பர் 8 போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை சந்தித்து இருந்தது.

அப்போது இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 181 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் செய்த போது இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர்கள் அர்ஷ்தீப் சிங் மற்றும் பும்ரா தலா மூன்று விக்கெட்களை வீழ்த்தி இருந்தனர். சுழற் பந்துவீச்சாளர்கள் ஜடேஜா மற்றும் அக்சர் பட்டேல் தலா ஒரு விக்கெட்டும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்களும் வீழ்த்தி இருந்தனர்.
இதில் குல்தீப் யாதவ் 4 ஓவர்களில் 32 ரன்கள் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார். அதாவது ஒரு ஓவருக்கு எட்டு ரன்கள் விட்டுக் கொடுத்திருந்தார். எனவே, இங்கு சுழற் பந்துவீச்சாளர்களால் ரன்களை கட்டுப்படுத்த முடியுமா? என்ற சந்தேகம் உள்ளது. எனவே, குல்தீப் யாதவை நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக கூடுதல் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சனை ஆட வைத்தால் பேட்டிங்கில் அது இந்திய அணிக்கு பலம் சேர்க்கும் என்ற கருத்து நிலவுகிறது.
மறுபுறம் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அணியில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என்பதில் பிடிவாதமாக இருக்கிறார். அமெரிக்காவில் நடந்த குரூப் சுற்று போட்டிகளின் போது மூன்று வேகப் பந்துவீச்சாளர்களும், வெஸ்ட் இண்டீஸ்-இல் நடந்த சூப்பர் 8 சுற்றில் கூடுதல் சுழற் பந்துவீச்சாளர் தேவை என்பதால் மூன்று சுழற் பங்குவீச்சாளர்களும் அணியில் இடம் பெற்றனர்.
அமெரிக்காவில் முகமது சிராஜ் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம் பெற்ற நிலையில், வெஸ்ட் இண்டீஸ் இல் நடக்கும் போட்டிகளில் அவர் நீக்கப்பட்டு குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டு இருக்கிறார். இதைத் தவிர இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. எனவே, இறுதிப் போட்டியின் போதும் எந்த ரிஸ்க்கும் எடுக்க கூடாது என்பதால் கேப்டன் ரோஹித் சர்மா எந்த மாற்றமும் செய்ய மாட்டார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக ஆட உள்ள இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன்: ரோஹித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், சிவம் துபே, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா