பிரிட்ஜ்டவுன்: 2024 டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உலகக் கோப்பை வென்று மாபெரும் சாதனை படைத்தது. இந்தப் போட்டியில் இந்திய அணி பேட்டிங்கில் தடுமாறிய போது பயிற்சியாளர் ராகுல் டிராவிட் செய்த ஒரு விஷயம் அணியை காப்பாற்றியது. இந்த வெற்றிக்கும் அதுவே அஸ்திவாரமாக இருந்தது.
2024 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தென்னாபிரிக்க அணிக்கு எதிராக இந்திய அணி பேட்டிங்கில் துவக்கத்திலேயே சரிவை சந்தித்தபோது பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அதிரடியாக பேட்டிங் வரிசையை மாற்றினார். அது இந்திய அணியை பேட்டிங்கில் காப்பாற்றியது. இந்தப் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

துவக்க வீரர் ரோஹித் சர்மா 9 ரன்களில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த ரிஷப் பண்ட் இரண்டு பந்துகளில் டக் அவுட் ஆனார். அடுத்து சூர்யகுமார் யாதவ் அணியை காப்பாற்றுவார் என அனைவரும் நம்பிய நிலையில் 4 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். ஐந்தாவது ஓவரிலேயே இந்திய அணி 34 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து மோசமான நிலையில் இருந்தது.
களத்தில் விராட் கோலி இருந்த நிலையில், ஐந்தாம் வரிசையில் சிவம் துபேவை அனுப்பாமல் ஆல் - ரவுண்டரான அக்சர் பட்டேலை அனுப்பினார் ராகுல் டிராவிட். இது சரியான முடிவு தானா? என ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருந்த நிலையில், அக்சர் பட்டேல் அபாரமாக ஆடி அணியை சரிவிலிருந்து மீட்டார்.
ஏற்கனவே, பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் போது அக்சர் பட்டேல் நான்காம் வரிசையில் அனுப்பப்பட்டிருந்தார். அப்போதும் இந்திய அணி இதே போல விரைவாக இரண்டு விக்கெட்களை இழந்து இருந்தது. இதுபோன்ற நேரத்தில் அணியை மீட்க அக்சர் பட்டேலை தேர்வு செய்து வைத்திருந்தார் பயிற்சியாளர் ராகுல் டிராவிட். அது இறுதிப் போட்டியில் இந்திய அணிக்கு கை கொடுத்தது.
ஒரு புறம் விராட் கோலி மிகவும் நிதானமாக ஆடினார். ஒரு பந்துக்கு ஒரு ரன் என்ற நிலையில் ரன் சேர்த்து வந்தார். மறுபுறம் அக்சர் பட்டேல் நான்கு சிக்ஸ், ஒரு ஃபோர் விளாசி இந்திய அணியின் ஸ்கோரை வேகமாக உயர்த்தினார். அவர் 31 பந்துகளில் 47 ரன்கள் சேர்த்தார். இந்த போட்டியில் இந்திய அணியில் விராட் கோலிக்கு அடுத்து அதிக ரன்கள் சேர்த்தது அவர்தான். அந்த வகையில் ராகுல் டிராவிட்டின் திட்டம் வெற்றி பெற்றது.
ஆனால், அக்சர் பட்டேல் கடைசி வரை நின்று ஆடி இருந்தால் இந்திய அணியின் ஸ்கோர் இன்னும் கூட உயர்ந்திருக்கும். ஆனால், அவர் 14 வது ஓவரிலேயே ரன் அவுட் ஆனார். அடுத்து விராட் கோலி கடைசி நான்கு ஓவர்களின் போது அதிரடியாக ஆடத் துவங்கினார். அவர் 59 பந்துகளில் 76 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார். விராட் கோலி இன்னும் கூட முன்கூட்டியே அதிரடியாக ஆடத் தொடங்கி இருக்கலாம். ஆனால், அதை அவர் செய்யவில்லை.
அடுத்து வந்த சிவம் துபே 16 பந்துகளில் 27 ரன்கள் சேர்த்தார். கடைசி நேரத்தில் ஹர்திக் பாண்டியா 2 பந்துகளில் 5 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 2 பந்துகளில் 2 ரன்களும் சேர்த்தனர். இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது. ஒருவேளை சிவம் துபே முன்பே அனுப்பப்பட்டு தனது விக்கெட்டை விரைவாக இழந்து இருந்தால் இந்திய அணி 150 ரன்களை கூட தாண்டி இருக்காது.
அடுத்து சேஸிங் செய்த தென்னாப்பிரிக்கா கடைசி ஓவரில் 16 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை வரை சென்று 169 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உலகக்கோப்பை வென்றது.