மும்பை: 2024 டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்ற நிலையில் இந்திய அணியின் ஆகச் சிறந்த ஆல் - ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து இருக்கிறார். முன்னதாக கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தனர்.
அவர்களை தொடர்ந்து உலகின் சிறந்த சுழற் பந்துவீச்சு ஆல் ரவுண்டர்களில் ஒருவராக விளங்கி வரும் ரவீந்திர ஜடேஜா சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "என் இதயம் முழுவதும் நன்றியுடன் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து விடைபெறுகிறேன். வலிமையான குதிரை பெருமிதத்துடன் ஓடுவது போல நான் எப்போதும் எனது நாட்டுக்காக, எனது மிகச் சிறந்த செயல்பாட்டை அளித்துள்ளேன். ஒருநாள் போட்டிகள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து அதை அளிப்பேன். டி20 உலகக் கோப்பை வெல்ல வேண்டும் என்ற எனது கனவு நனவானது. இது எனது சர்வதேச டி20 வாழ்வின் உச்சமாகும். நீங்கள் எனக்கு ஆதரவளித்ததற்கு, இந்த நினைவுகளை அளித்ததற்கு மிக்க நன்றி." என ரவீந்திர ஜடேஜா கூறி இருக்கிறார்.

முன்னதாக 2024 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜா ஆல் - ரவுண்டராக இடம் பெற்றார். இந்த உலகக் கோப்பை தொடரில் அவருக்கு போதிய பந்து வீசும் வாய்ப்புகள் அளிக்கப்படவில்லை. அவருக்கு கிடைத்த சில வாய்ப்புகளிலும் அவரால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. அரை இறுதிப் போட்டியில் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டிருந்தார்.
மற்ற போட்டிகளில் அவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்த நிலையில் இளம் வீரர்களுக்கு வழி விட்டு ஜடேஜா ஓய்வை அறிவித்து இருக்கிறார். அவருக்கு தற்போது 35 வயது தான் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அவரால் இன்னும் ஓரிரு ஆண்டுகள் டி20 போட்டிகளில் விளையாட முடியும் என்ற போதும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் இந்திய அணி நிர்வாகத்தின் முடிவை ஏற்று அவர் ஓய்வை அறிவித்து இருப்பதாக கூறப்படுகிறது.
இந்திய கிரிக்கெட்டின் மூன்று முக்கிய வீரர்கள் ஆன ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா வரிசையாக சர்வதேச டி20 போட்டிகளில் ஓய்வை அறிவித்திருப்பதை அடுத்து டி20 கிரிக்கெட்டில் ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளதாக ரசிகர்கள் குறிப்பிட்டு, அவர்களுக்கு நன்றிகளையும், வாழ்த்துக்களையும் கூறி வருகின்றனர்.