பிரிட்ஜ்டவுன்: 2024 டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக டி20 உலகக் கோப்பை வென்று மாபெரும் சாதனை படைத்தது.
இந்த போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 176 ரன்கள் குவித்தது. அடுத்து தென்னாப்பிரிக்க அணி ரன் ரேட் குறையாமல் சேஸிங் செய்து வந்தது. சரியாக 15 ஓவர்கள் முடிவில் இந்திய அணி தோல்வியடையும் நிலையில் இருந்தது. அக்சர் பட்டேல் வீசிய 15வது ஓவரில் கிளாஸன் அதிரடியாக ஆடி 24 ரன்கள் குவித்தார். அதன் முடிவில் தென்னாபிரிக்க அணி 30 பந்துகளில் 30 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் இருந்தது.

அப்போது களத்தில் டேவிட் மில்லர் மற்றும் கிளாசன் இருந்தனர். இதை அடுத்து தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெறும் என அனைவரும் எண்ணினர். ஆனால், அதன் பின் மூன்று இந்திய பந்துவீச்சாளர்கள் ஆட்டத்தை இந்திய அணியின் வசம் மாற்றினர்.
அந்த மூன்று பந்துவீச்சாளர்கள் ஹர்திக் பாண்டியா, பும்ரா மற்றும் அர்ஷ்தீப் சிங். 15வது ஓவரின் பின்னடைவுக்கு பின் 16வது ஓவரை பும்ரா வீசினார். அவர் நான்கு ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். அடுத்து 17வது ஓவரை வீசிய ஹர்திக் பாண்டியா அந்த ஓவரின் முதல் பந்திலேயே கிளாசன் விக்கெட்டை வீழ்த்தி திருப்பு முனையை ஏற்படுத்தினார்.
அடுத்து பும்ரா 18 வது ஓவரை வீசினார் அதில் அவர் மார்கோ ஜான்சன் விக்கெட்டை வீழ்த்தியதுடன் 2 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். இதை அடுத்து தென்னாபிரிக்க அணிக்கு அழுத்தம் ஏற்பட்டது. 19ஆவது ஓவரை வீசிய அர்ஷ்தீப் சிங் 4 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். அடுத்து கடைசி ஓவரில் 16 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இருந்தது தென்னாப்பிரிக்கா அணி.
கடைசி ஓவரை ஹர்திக் பாண்டியா வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தில் டேவிட் மில்லர் சிக்ஸ் அடிக்க முயன்றார். ஆனால் பவுண்டரி எல்லையில் நின்றிருந்த சூர்யகுமார் யாதவ் பந்தை பிடித்து மேலே தூக்கிப்போட்டு பின்னர், பவுண்டரியை தாண்டி சென்றார். பின் மீண்டும் உள்ளே வந்து மேலே தூக்கி வீசப்பட்ட பந்தை கேட்ச் பிடித்து டேவிட் மில்லர் விக்கெட்டை வீழ்த்தினார். அதுவே போட்டியின் போட்டியை இந்திய அணியின் வசம் கொண்டு வந்தது.
அதன் பின் கடைசி ஓவரில் தென்னாப்பிரிக்கா அணி எட்டு ரன்கள் மட்டுமே எடுத்தது. இதை அடுத்து இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உலகக் கோப்பையை வென்றது. பும்ரா மற்றும் ஹர்திக் பாண்டியா கட்டுக்கோப்பாக பந்து வீசி விக்கெட்களையும் வீழ்த்தியது மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. சூர்யகுமார் யாதவ் பிடித்த கேட்ச்சால் கடைசி ஓவரில் ஆட்டம் இந்தியா வசம் வந்தது.