பிரிட்ஜ்டவுன்: 2024 டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது. அந்த வெற்றிக்கு பின் இந்திய வீரர்கள் மைதானத்தில் ஆங்காங்கே தங்கள் உணர்ச்சி பெருக்கையும், கொண்டாட்டத்தையும் வெளிப்படுத்தி வந்தனர். அதே சமயம் தென்னாப்பிரிக்க வீரர்கள் வெற்றிக்கு மிக அருகே வந்து தோல்வி அடைந்ததால் மனம் துவண்டு போயிருந்தனர்.
இதுவரை உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கு கூட முன்னேற முடியாமல் இருந்த தென்னாப்பிரிக்க அணி, முதன்முறையாக உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருந்தது. தங்களுக்கு கிடைத்த இந்த அரிய வாய்ப்பில் 30 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலைக்கு போட்டியை கொண்டு சென்று பின்னர் தோல்வி அடைந்ததால் தென்னாப்பிரிக்க வீரர்கள் மைதானத்தில் ஆங்காங்கே கண்ணீர் விட்டபடி அமர்ந்திருந்தனர். அவர்களது குடும்பத்தினர் அவர்களை தேற்றி வந்தனர்.

இதனிடையே ரிஷப் பண்ட் தென்னாப்பிரிக்க வீரர்கள் அருகில் சென்று அவர்களை தட்டிக் கொடுத்து ஆறுதல் கூறினார். மூத்த வீரர் க்விண்டன் டி காக் அவரது மகளுடன் சோகமாக அமர்ந்திருந்தார். அப்போது ரிஷப் பண்ட் அவருடன் சில வார்த்தைகள் பேசி அவரை புன்னகைக்க வைத்தார். மேலும், சில தென்னாப்பிரிக்க வீரர்களுடன் அவர் ஆறுதலாக பேசினார். ரிஷப் பண்டின் இந்த செயல் நெகிழ வைக்கும் வகையில் இருந்தது.
மற்ற இந்திய வீரர்கள் இதை செய்யவில்லையே என சிலர் கேள்வி எழுப்பலாம். விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவுக்கு இதுவே கடைசி சர்வதேச டி20 போட்டியாகும். தங்களின் கடைசி டி20 போட்டியில் உலகக் கோப்பையை வென்றதால் அவர்கள் உணர்ச்சி பெருக்கில் இருந்தனர். மேலும், 7 மாதங்களுக்கு முன்பு தான் ஒரு நாள் உலகக் கோப்பை போட்டியின் இறுதிப்போட்டி வரை சென்று இந்திய அணி தோல்வி அடைந்திருந்தது. அந்த வலி மற்றும் வேதனைக்கு முடிவுரை எழுதும் வகையில் இந்த டி20 உலக கோப்பை வெற்றி அமைந்ததால் இந்திய வீரர்கள் அனைவரும் உணர்ச்சி பெருக்கோடு இருந்தனர்.
மேலும், ராகுல் டிராவிட் இந்த உலகக்கோப்பை இறுதி போட்டியுடன் இந்திய அணியில் இருந்து விடைபெறுகிறார். ஹர்திக் பாண்டியா கடந்த ஆறு மாதங்களில் ரசிகர்களிடம் இருந்து எதிர்ப்பை சந்தித்த நிலையில் இந்த வெற்றி அதற்கு மருந்தாக அமைந்ததாக குறிப்பிட்டிருந்தார். இப்படி ஒவ்வொரு இந்திய வீரரும் தனிப்பட்ட முறையில் உணர்ச்சிப் பெருக்கில் இருந்ததால் அவர்களால் தென்னாப்பிரிக்க வீரர்களை தேற்ற முடியாத நிலை இருந்தது. ஆனால், ரிஷப் பண்ட் சூழ்நிலையை உணர்ந்து இந்திய அணியின் சார்பாக தென்னாப்பிரிக்க வீரர்களுக்கு ஆறுதல் வார்த்தைகளை கூறினார்.