பிரிட்ஜ்டவுன்: சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து விராட் கோலி ஓய்வு அறிவிப்பை வெளியிட்ட நிலையில், அடுத்த சில மணி நேரங்களில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவும் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்து இருக்கிறார். 2024 டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உலகக் கோப்பையை வென்றது. அதன் முடிவில் இரண்டு இந்திய ஜாம்பவான்கள் ஓய்வை அறிவித்து உள்ளனர்.
2007 டி20 உலகக் கோப்பைக்கு பின் இரண்டாவது முறையாக டி20 உலக கோப்பையை இந்திய அணி வென்றது. இந்த நிலையில் இறுதிப் போட்டியில் 76 ரன்கள் குவித்து ஆட்ட நாயகன் விருதை பெற்ற விராட் கோலி இதுவே தனது கடைசி டி20 உலக கோப்பை என்றும், இதுவே தனது கடைசி டி20 போட்டி என்றும் கூறினார். இளம் வீரர்களுக்கு வழி விடுவதாகவும் அறிவித்தார்.

இந்த நிலையில் ரோஹித் சர்மா என்ன முடிவு எடுப்பார்? என அனைவரும் எதிர்பார்த்து இருந்தனர். போட்டி முடிந்து கொண்டாட்டங்களில் ஈடுபட்டது இந்திய அணி. அதன் பின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் ரோஹித் சர்மா தனது ஓய்வு முடிவை அறிவித்தார். சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக கூறினார். மேலும், டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் தான் தொடர்ந்து விளையாடுவேன் எனவும் அறிவித்தார்.
டி20 கிரிக்கெட்டில் அதிக ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் இருக்கும் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி அடுத்தடுத்து ஓய்வு பெற்று உள்ளனர். உலகக் கோப்பையை வென்று தங்கள் சர்வதேச டி20 கிரிக்கெட் வாழ்வை முடிவுக்கு கொண்டு வந்துள்ளனர். இதை அடுத்து இந்திய அணியின் உலகக் கோப்பை வெற்றியால் மகிழ்ச்சியில் இருந்த ரசிகர்கள் இரண்டு ஜாம்பவான்களின் ஓய்வு முடிவால் சோகத்தில் உள்ளனர்.