பிரிட்ஜ்டவுன்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனி அணித் தேர்வில் எந்த ஃபார்முலாவை கடைப்பிடிப்பாரோ, அதே விஷயத்தை ரோஹித் சர்மா இந்த உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் கடைபிடித்து வருகிறார். அது உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணிக்கு பின்னடைவாக மாறுமா? என்ற விவாதத்தை கிளப்பியுள்ளது.
ஐபிஎல் தொடரில் மிகவும் வெற்றிகரமான அணிகளில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை மூன்று முறை மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறாமல் போய் உள்ளது. அந்த அளவுக்கு வெற்றிகரமான அணியாக இருக்கக் காரணம், அந்த அணி ஃபார்ம் அவுட் ஆன வீரர்களுக்கு அதிக போட்டிகளில் ஆட வாய்ப்பு அளிப்பது தான். ஒரு வீரர் நம்பிக்கையின்றி இருக்கும்போது அவருக்கு வாய்ப்பு அளித்து, நம்பிக்கை அளிக்கும் பட்சத்தில் அவர் தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார்.

அதை தோனி சரியாக செய்து வந்தார். அதன் காரணமாகவே சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றிகரமான அணியாக உள்ளது. அதே விஷயத்தை இந்திய அணியில் செயல்படுத்த வேண்டும் என நினைக்கிறார் ரோஹித் சர்மா. குறிப்பாக இந்த உலகக் கோப்பையில் அவர் இந்திய அணியில் போட்டி சூழ்நிலையின் காரணமாக ஒரே ஒரு மாற்றம் மட்டுமே செய்துள்ளார். குரூப் சுற்றுக்கு பின் வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜை நீக்கிவிட்டு, சுழற் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் இடம்பெற்று வருகிறார். அந்த ஒரு மாற்றத்துக்கு பின் இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
விராட் கோலி துவக்க வீரராக இறங்கி வருவதால் சரியாக ரன் குவிக்க முடியாமல் திணறி வருகிறார். அவரை மூன்றாம் வரிசையில் இறக்க வேண்டும் என பலரும் சுட்டிக்காட்டுகின்றனர். ஆனால் அதை செய்தால் அணியில் பேட்டிங் வரிசையில் மேலும் சில மாற்றங்களை செய்ய வேண்டி வரும். அதேபோல மிடில் ஆர்டரில் சிவம் துபே சரியாக ரன் குவிக்காததால் அவரை நீக்கிவிட்டு சஞ்சு சாம்சனை மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்ய வைக்க வேண்டும் எனவும் முன்னாள் வீரர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.
ஆனால், எந்த வீரரையும் ஃபார்ம் அவுட் என்ற காரணத்துக்காக அணியை விட்டு நீக்க மாட்டேன் என பிடிவாதமாக இருக்கிறார் ரோஹித் சர்மா. இந்திய அணி அரை இறுதி வரை ஒரு போட்டியில் கூட தோல்வி அடையாமல் இருப்பதால் அவரது முடிவு இதுவரை சரியானதாகவே இருந்துள்ளது. ஆனால், இறுதிப் போட்டியில் ஒருவேளை விராட் கோலி அல்லது சிவம் துபே சரியாக ஆடாமல் போனால், அதனால் இந்திய அணிக்கு பாதிப்பு ஏற்பட்டால் என்ன செய்வது என விமர்சகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதுவரை அணியில் மாற்றம் செய்யாமல், திடீரென இறுதிப் போட்டியில் மாற்றம் செய்தாலும், அது அணியில் இருக்கும் மற்ற வீரர்களுக்கு ஒரு நிலையற்ற மனநிலையை ஏற்படுத்தும். எனவே, இனி மாற்றம் செய்ய முடியாது. விராட் கோலி ஃபார்ம் அவுட் என்பது சூப்பர் 8 சுற்றின் இரண்டாவது போட்டியிலேயே உறுதியாகி விட்டது. அப்படி என்றால் அந்த சுற்றின் மூன்றாவது போட்டியில் இந்திய அணி அவரை நீக்கிவிட்டோ அல்லது அவர் பேட்டிங் ஆர்டரை மாற்றியோ இருக்க வேண்டும். ஆனால், கேப்டன் ரோஹித் சர்மா அதை செய்யவில்லை. இனி அணியில் மாற்றம் செய்தால் அது குழப்பத்தை தான் ஏற்படுத்தும். ரோஹித் சர்மா எடுத்த இந்த முடிவு சரியா? இல்லையா? என பொறுத்திருந்து பார்க்கலாம்.