பிரிட்ஜ்டவுன்: 2024 டி20 உலகக்கோப்பையில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் கடைசி ஓவரில் சூர்யகுமார் யாதவ் பிடித்த கேட்ச்சால் இந்திய அணி வெற்றி உறுதியானது. 1983 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் கபில் தேவ் பிடித்த கேட்ச் எப்படி இந்திய அணிக்கு கோப்பை வென்று கொடுத்ததோ அதே போல சூர்யகுமார் கேட்ச் கடைசி ஓவரில் வெற்றியை உறுதி செய்தது.
2024 டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் சேர்த்தது. அடுத்து தென்னாப்பிரிக்க அணி சேஸிங் செய்தது.

அந்த அணி 15 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்து இருந்தது. கிளாசன் 15வது ஓவரில் 24 ரன்கள் எடுத்ததால் போட்டி தென்னாப்பிரிக்கா வசம் சென்றது. பின்னர் அர்ஷ்தீப் சிங், பும்ரா, ஹர்திக் பாண்டியா வரிசையாக கட்டுக் கோப்பாக வீசி தென்னாப்பிரிக்க அணியின் விக்கெட்களையும் வீழ்த்தினர். கடைசி ஓவரில் 16 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் தென்னாப்பிரிக்கா இருந்தது.
ஹர்திக் பாண்டியா கடைசி ஓவரை வீசினார். டேவிட் மில்லர் மட்டுமே தென்னாப்பிரிக்க அணியில் ரன் குவிக்கும் பேட்ஸ்மேனாக இருந்தார். இந்த நிலையில், கடைசி ஓவரின் முதல் பந்திலேயே அவர் பந்தை தூக்கி சிக்ஸ் அடிக்க முயன்றார். பந்து பவுண்டரி எல்லைக்கு அருகே சென்றது. அப்போது சூர்யகுமார் யாதவ் மின்னல் வேகத்தில் ஓடி வந்து பந்தை பிடித்தார். ஆனால், அவர் வந்த வேகத்தில் பவுண்டரி எல்லையை தாண்டி செல்ல வேண்டிய நிர்பந்தத்தில், பந்தை மேலே தூக்கி போட்டு பவுண்டரி எல்லையை தாண்டி சென்றார். பின் மீண்டும் உள்ளே வந்து பந்தை கேட்ச் பிடித்தார். இதை அடுத்து டேவிட் மில்லர் ஆட்டமிழந்தார். இது போட்டியின் மிகப் பெரிய திருப்புமுனையாக மாறியது. அந்த கேட்சை அவர் தவற விட்டு இருந்தால் அது சிக்ஸராக மாறி இருக்கும்.
பின்னர் கடைசி ஓவரில் சரியான பேட்ஸ்மேன்கள் இல்லாமல் திணறிய தென்னாப்பிரிக்கா 8 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது முறையாக இந்தியா டி20 உலகக்கோப்பை வென்றது.