பிரிட்ஜ்டவுன்: சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து விராட் கோலி ஓய்வை அறிவித்தார். 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று இரண்டாவது முறையாக டி20 உலகக்கோப்பை வென்றது. இந்தப் போட்டியின் வெற்றிக்கு பிறகு பேசிய விராட் கோலி, "இதுவே எனது கடைசி டி20 உலகக்கோப்பை, இதுவே எனது கடைசி டி20 போட்டி" என அறிவித்தார்.

2022 டி20 உலகக்கோப்பைக்கு பின் விராட் கோலி, ஓராண்டு காலத்துக்கும் மேல் இந்திய டி20 அணியில் இடம் பெறவில்லை. இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் விராட் கோலி இந்திய டி20 அணிக்கு திரும்பினார். 2024 ஐபிஎல் தொடரில் அபார ஆட்டம் ஆடிய அவர், 2024 டி20 உலகக்கோப்பைக்கான அணியிலும் இடம் பெற்றார்.
தனது கடைசி டி20 உலகக்கோப்பை தொடரில் முதல் ஏழு போட்டிகளில் அவர் 75 ரன்கள் மட்டுமே அடித்து இருந்தார். அரை இறுதி வரை விராட் கோலியால் ரன் குவிக்க முடியவில்லை. இந்த நிலையில் இறுதிப் போட்டியில் அவர் 59 பந்துகளில் 76 ரன்கள் குவித்தார். இந்திய அணி 176 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய தென்னாப்பிரிக்கா 169 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இரண்டாவது முறையாக டி20 உலகக்கோப்பை வென்றது.
இந்த வெற்றிக்கு பின் ஆட்டநாயகன் விருதை வென்ற பின் பேசிய விராட் கோலி தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார். "இதுதான் எனது கடைசி டி20 உலகக்கோப்பை. இதைத் தான் நாங்கள் இதில் அடைய நினைத்தோம். ஒருநாள் நம்மால் ரன்களே அடிக்க முடியாது எனத் தோன்றும். அதன் பின் இது போன்று (ரன் குவிப்பது) நடக்கும். கடவுள் அற்புதமானவர். சரியான நேரத்தில் இப்போது இல்லை என்றால் எப்போதும் இல்லை என்ற நிலையில் சிறப்பான செயல்பாடு வெளிப்பட்டது. இதுவே இந்திய அணிக்காக எனது கடைசி டி20 போட்டி. இதில் உலகக்கோப்பை வெல்ல வேண்டும் என்று நினைத்தோம்" என்றார் விராட் கோலி.
அப்போது அவரிடம் ஹர்ஷா போக்லே, "நீங்கள் மிகப் பெரிய அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறீர்கள். இது தான் உங்கள் கடைசி டி20 போட்டியா?" எனக் கேட்டார். அதற்கு பதில் அளித்த விராட் கோலி, "ஆம், இதுவே கடைசி சர்வதேச டி20 போட்டி. இது அனைவருக்கும் தெரிந்த ரகசியம் தான். நாங்கள் தோற்று இருந்தால் நான் இதை அறிவிக்காமல் போயிருக்க மாட்டேன் என்றெல்லாம் இல்லை. அடுத்த தலைமுறைக்கான நேரம் இது. அவர்கள் டி20 யில் பல அற்புதங்களை செய்வார்கள். நாம் ஐபிஎல் தொடரில் அதை பார்த்து இருக்கிறோம்." என்றார் விராட் கோலி.