பிரிட்ஜ்டவுன்: 2024 டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணிக்கு துவக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி களமிறங்கினர். இதற்கு முன் விராட் கோலி 7 போட்டிகளில் 75 ரன்கள் மட்டுமே எடுத்து மோசமான ஃபார்மில் இருந்தார். அவர் இறுதிப் போட்டியில் பெரிய இன்னிங்க்ஸ் ஆடுவாரா? என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
முதல் ஓவரின் முதல் பந்தில் ரோஹித் சர்மா ஒரு ரன் எடுத்த நிலையில், அடுத்த விராட் கோலி ஸ்ட்ரைக்-குக்கு வந்தார். அவர் முதல் ஓவரில் அதிரடியாக மூன்று ஃபோர் அடித்து மிரட்டினார். முதல் ஓவரில் மட்டும் இந்திய அணி 15 ரன்கள் எடுத்தது. இதன் மூலம், இந்த உலகக் கோப்பையில் முதல் ஓவரில் இந்திய அணி எடுத்த அதிகபட்ச ஸ்கோர் என்ற சாதனை நிகழ்த்தப்பட்டது.

விராட் கோலி இதற்கு முன் சரியாக ரன் குவிக்கவில்லை என கூறப்பட்டு வந்த நிலையில் முதல் ஓவரிலேயே அவர் மூன்று ஃபோர் அடித்ததால், அவர் 5 பந்துகளில் 14 ரன்கள் சேர்த்து இருந்தார். இந்திய அணி சிறப்பான துவக்கம் பெற்றதாக இந்திய ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் இருந்தனர். இந்த நிலையில் இரண்டாவது ஓவரில் அதிர்ச்சி காத்திருந்தது.
இரண்டாவது ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் இரண்டு
ஃபோர் அடித்த ரோஹித் சர்மா நான்காவது பந்தில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரிஷப் பண்ட் அதேபோல் கடைசி பந்தில் ரன் ஏதும் எடுக்காமல் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதை அடுத்து இந்திய அணி 23 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்தது. அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். விக்கெட்கள் பறிபோனாலும் விராட் கோலி தொடர்ந்து சிறப்பாக ஆடியதால் இந்திய அணி ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர்.