பிரிட்ஜ்டவுன்: இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோத உள்ள 2024 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி வரும் சனிக்கிழமை அன்று இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்க உள்ளது. இந்த இறுதிப் போட்டி பார்படோஸ் நகரில் உள்ள பிரிட்ஜ்டவுன் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த இறுதிப் போட்டி நடைபெறும் நேரத்தில் மழை வருமா? என்பது குறித்த வானிலை நிலவரம் வெளியாகி உள்ளது.
பிரிட்ஜ்டவுன் பகுதியின் சனிக்கிழமை வானிலை அறிக்கையில் குறைந்தபட்சம் 40 சதவீத முதல் அதிகபட்சம் 75 சதவீதம் வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. போட்டி நேரத்திற்கு சில மணி நேரம் முன்பு இருந்து போட்டி நேரம் முழுவதும் மழை பெய்ய அதிக வாய்ப்பு உள்ளது. இந்தியா - தென்னாப்பிரிக்கா இறுதிப் போட்டி திட்டமிட்டபடி சனிக்கிழமை நடைபெறவில்லை என்றால் ரிசர்வ் நாள் ஒதுக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமை போட்டியை நடத்த முடியாமல் போனால், அல்லது பாதி போட்டியை மட்டுமே நடத்தி இருந்தால் ஞாயிற்றுக்கிழமை அன்று இறுதிப் போட்டி தொடர்ந்து நடத்தப்படும். எனவே, இந்த இரண்டு நாட்களில் இறுதிப் போட்டியை எப்படியாவது நடத்தி முடிக்க அம்பயர்கள் முயற்சி செய்வார்கள்.
ரிசர்வ் நாளான ஞாயிறு அன்றும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. எனினும், மழையின் அளவு முந்தைய நாளை விட குறைவாகவே இருக்கும் என வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போட்டியில் இரண்டு அணிகளும் குறைந்தபட்சம் 10 ஓவர்களாவது ஆடினால் மட்டுமே முடிவை அறிவிக்க முடியும் என்ற விதி உள்ளது. சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என இரண்டு நாட்கள் உள்ளதால் எப்படியும் இந்த இரண்டு நாட்களுக்குள் போட்டியை நடத்தி முடித்து விட முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.
ஆனால், சனிக்கிழமை அன்று பெய்யும் மழையால் இந்த போட்டி நடைபெற உள்ள பிரிட்ஜ்டவுன் மைதானத்தின் அவுட் ஃபீல்டு பகுதி மிக மோசமாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. அப்படி நடந்தால் அதை சரி செய்யவே பல மணி நேரம் ஆகும். அதன் காரணமாகவே இந்த போட்டி முழுமையாக நடைபெறுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.