பிரிட்ஜ்டவுன்: 2024 டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன. இந்த போட்டி சனிக்கிழமை (இன்று) இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு துவங்கி நடைபெறும். இந்த போட்டியின் போது மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை அறிக்கை வெளியாகி உள்ளது. மழை பெய்தால் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வகுத்துள்ள விதிகளின்படி எப்படி போட்டி நடத்தப்படும், போட்டி கைவிடப்பட்டால் எந்த அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்? என்பது குறித்து பார்க்கலாம்.
வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் ஒன்றான பார்படோஸ்-இல் உள்ள பிரிட்ஜ் டவுன் மைதானத்தில் இந்த இறுதிப் போட்டி நடைபெற உள்ளது. இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய இரு அணிகளும் இந்த உலகக்கோப்பை தொடரில் இதுவரை எந்த போட்டியிலும் தோல்வி அடையாமல் இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது குறிப்பிடத்தக்கது. அதனால், இந்த இறுதிப் போட்டிக்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளது. எனினும், இறுதிப் போட்டியின் போது மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் போட்டி திட்டமிட்டபடி நடைபெறுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இந்திய - தென்னாப்பிரிக்கா மோதும் இந்த இறுதிப் போட்டிக்கு ரிசர்வ் நாள் உள்ளது. எனவே, சனிக்கிழமை அன்று போட்டியை நடத்தி முடிக்க முடியாவிட்டால், ஞாயிற்றுக்கிழமை அன்று போட்டி தொடர்ந்து நடத்தப்படும். சனிக்கிழமை அன்று போட்டியை முழுமையாக நடத்தி முடிக்க கூடுதல் நேரமாக சுமார் 190 நிமிடங்கள் வழங்கப்படும். எனவே, அதிக நேரம் உள்ளது என்பதால் இந்த போட்டி மழைக்கு நடுவே பகுதி, பகுதியாக கூட நடத்தி முடிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விதியின் படி இரண்டு அணிகளும் குறைந்தது பத்து ஓவர்கள் பேட்டிங் இருந்தாலே அது ஒரு போட்டியாக கருதப்பட்டு, போட்டி முடிவை அறிவிக்க முடியும். அதனால், மழையால் ஓவர்களை குறைத்து போட்டியை நடத்த திட்டமிட்டால், குறைந்தது இரு அணிகளும் 10 ஓவர்கள் பேட்டிங் செய்யும் வகையில் போட்டி நடத்தப்பட வேண்டும். இந்த நிலையில், சனிக்கிழமை அன்று போட்டியை நடத்த முடியாமல் போனாலும் அல்லது சனிக்கிழமை அன்று பாதி போட்டி மட்டுமே நடத்தப்பட்டாலோ மீதமுள்ள போட்டி அல்லது முழு போட்டி ஞாயிற்றுக்கிழமை அன்று தொடர்ந்து நடத்தப்படும்.
ரிசர்வ் நாளான ஞாயிற்றுக்கிழமையும் மழையால் பாதிக்கப்பட்டு போட்டி முழுமையாக நடைபெறாமல் போனால் போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்படும். அந்த சூழ்நிலையில் இரண்டு அணிகளும் இணைந்து உலகக் கோப்பையை வென்றதாக அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே, இதுபோல சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்திய ஒரே ஒரு தொடரில் மட்டுமே இரண்டு அணிகளும் சேர்ந்து கோப்பையை பகிர்ந்து கொண்டுள்ளன. அது 2002 ஆம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நடந்தது. அப்போது இறுதிப் போட்டியில் மழை பெய்ததால் போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதனால், இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்த இந்தியா மற்றும் இலங்கை அணிகள் சாம்பியன்ஸ் ட்ராபியை பகிர்ந்து கொண்டன.