பார்படாஸ்: டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அணி வீழ்த்தியது, 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த போட்டியில் ஆட்டநாயகனாக விராட் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், ரோகித் சர்மாவை தோளில் தூக்கி கொண்டாட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்களை சேர்த்தது. இதன்பின் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 169 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக நட்சத்திர வீரர் விராட் கோலி 59 பந்துகளில் 76 ரன்களை விளாசினார். கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடிய விராட் கோலி, இந்திய அணி சவாலான இலக்கை நிர்ணயிக்க காரணமாக அமைந்தார். இதனால் டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் ஆட்டநாயகன் விருதை வென்று விராட் கோலி சாதனை படைத்துள்ளார்.
அதேபோல் விராட் கோலி முதல்முறையாக டி20 உலகக்கோப்பை தொடரை வென்றுள்ளார். இதுகுறித்து விராட் கோலி பேசுகையில், இதுதான் எனது கடைசி டி20 உலகக்கோப்பை தொடர். இதனை தான் சாதிக்க விரும்பிவோம். சில நேரங்களில் நம்மால் ரன்கள் சேர்க்க முடியாது என்று நினைத்திருந்த போது, இதுபோன்ற விஷயங்கள் நடக்கும். கடவுளுக்கு நன்றி. இப்போது இல்லை என்றால் எப்போது என்ற சூழலில் இருந்தோம்.
நான் இந்திய அணிக்காக விளையாடும் கடைசி டி20 போட்டி இதுதான். அதனால் உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்று நினைத்தோம். ஒருவேளை நாங்கள் தோல்வியடைந்திருந்தால், வெளிப்படையாக சொல்லியிருக்க மாட்டேன். டி20 கிரிக்கெட்டை அடுத்த கட்டத்திற்கு இளைஞர்கள் கொண்டு செல்ல இதுதான் சரியான நேரம். ஐசிசி தொடரை வெல்ல நீண்ட ஆண்டுகளாக காத்திருந்தோம் என்று தெரிவித்தார்.
2011 உலகக்கோப்பை தொடரின் போது சச்சினை தோளில் தூக்கி கொண்டாடினீர்கள். அதுபோன்ற நேரம் இது உங்களுக்கு என்று ஹர்ஷா போக்ளே கூறினார். அதற்கு விராட் கோலி, அப்படியல்ல. நான் 6வது டி20 உலகக்கோப்பையில் விளையாடுகிறேன். ஆனால் ரோகித் சர்மாவை பாருங்கள். அவருக்கு இது 9வது டி20 உலகக்கோப்பை தொடர் தான். அதனால் அனைத்து கொண்டாட்டங்களுக்கு ரோகித் சர்மாவே உரித்தானவர் என்று தெரிவித்துள்ளார்.