பார்படாஸ்: 10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதிபெற்றுள்ளது. இந்த நிலையில் 2014ஆம் ஆண்டு நடந்த டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் என்ன நடந்தது? அந்த அணியில் இருந்த வீரர்கள் இப்போது என்ன செய்கிறார்கள் என்பதை பார்க்கலாம்.
2011 உலகக்கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி ஆகிய ஐசிசி தொடர்களை இந்திய அணி அடுத்தடுத்து வென்றிருந்தது. இதனால் 2014ஆம் ஆண்டு நடந்த டி20 உலகக்கோப்பை தொடரையும் இந்திய அணி வெல்வதற்கு வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்பட்டது. இதன் அரையிறுதி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

பின்னர் இறுதிப்போட்டியில் மீண்டும் இலங்கை - இந்தியா அணிகள் மோதின. இதனால் 2011 உலகக்கோப்பையை போல் மீண்டும் இலங்கை அணியை வீழ்த்தி இந்திய அணியால் கோப்பையை வெல்லும் என்று ரசிகர்கள் நம்பி இருந்தனர். இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி, இந்திய அணியை பேட்டிங் செய்ய பணித்தது.
இதன்பின் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு வெறும் 130 ரன்களை மட்டுமே சேர்த்தது. தொடக்க வீரரான ரஹானே 3 ரன்களும், ரோகித் சர்மா 26 பந்துகளில் 29 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அந்த போட்டியில் ஒருமுனையில் நின்று விராட் கோலி அதிரடியாக விளையாடி ரன்களை உயர்த்த, மறுமுனையில் நின்றிருந்த யுவராஜ் சிங் 21 பந்துகளில் ஒரு பவுண்டரி, சிக்ஸ் கூட அடிக்காமல் 11 ரன்களை சேர்த்தார்.
ஆனால் விராட் கோலி 58 பந்துகளில் 4 சிக்ஸ், 5 பவுண்டரி உட்பட 77 ரன்களை சேர்த்தார். இதன்பின் களமிறங்கிய இலங்கை அணி 17.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. நட்சத்திர வீரர் சங்கக்காரா 35 பந்துகளில் 52 ரன்களை விளாசினார். இந்த போட்டியில் தான் மலிங்காவின் ஒய்டு யார்க்கர்கள் இந்திய அணி பேட்ஸ்மேன்களை கதிகலங்க வைத்தது.
10 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணியில் இருந்து ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் ஜடேஜா ஆகியோர் மட்டுமே தற்போதைய டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடவுள்ளனர். இதனால் பழைய காயங்களுக்கு மருந்து போடும் வகையில், நாளை நடக்கவுள்ள தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான இறுதிப்போட்டி அமையுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.