நியூயார்க் : அமெரிக்காவில் டி20 உலகக் கோப்பையில் பங்கேற்பதற்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி வீரர்களுக்கு ஹோட்டல் அறையில் அசவுகரியம் ஏற்பட்டதாகவும், இதை அடுத்து அவர்கள் பிசிசிஐ-யிடம் இது குறித்து புகார் அளித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
உலகின் பணக்கார நாடான அமெரிக்காவில் இந்திய வீரர்களுக்கு நல்ல ஹோட்டல் அறை கூட கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. அங்குள்ள உடற்பயிற்சிக் கூடம் போதுமான வசதிகளுடன் இல்லை எனவும், அதனால் இந்திய வீரர்கள் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் கூறப்படுகிறது.

2024 டி20 உலகக் கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ்-இல் நடைபெற்று வருகிறது. அமெரிக்காவில் கிரிக்கெட் விளையாட்டை பிரபலப்படுத்தும் நோக்கில் உலகக்கோப்பை தொடர் அங்கு நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக இந்திய அணி ஆடும் 4 குரூப் சுற்று போட்டிகளும் அமெரிக்காவில் நடைபெறும் வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டது.
அதன் மூலம் அமெரிக்காவில் இருக்கும் இந்தியர்கள் பெருமளவில் இந்திய அணி ஆடும் போட்டிகளை பார்க்க வருவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அது உண்மையும் ஆனது. ஆனால், இந்திய அணிக்காக தயாரிக்கப்பட்ட இந்த திட்டத்தில் பல்வேறு குளறுபடிகளும் நடந்துள்ளன. வெறும் ஆறு மாத காலத்தில் நியூயார்க் நகரத்தில் தற்காலிக கிரிக்கெட் மைதானம் உருவாக்கப்பட்டது. அந்த மைதானத்தின் பிட்ச் மிக மோசமாக உள்ளதாக குற்றச்சாட்டு உள்ளது.
அடுத்து இந்திய வீரர்கள் பயிற்சி செய்வதற்கான மைதானம் இல்லாததால் ஒரு பூங்காவில் அவர்கள் பயிற்சி செய்து வருகிறார்கள்.. அங்கு உருவாக்கப்பட்டு இருக்கும் பிட்ச் மிக அபாயகரமானதாக உள்ளது. அதிகம் பவுன்ஸ் ஆகிறது. அதில் பயிற்சி செய்தால் காயம் ஏற்படும் வாய்ப்புள்ளதாக இந்திய வீரர்கள் புகார் கூறினர். எனினும் திடீரென எந்த மாற்றத்தையும் செய்ய முடியாது என்பதால் பிசிசிஐ இந்திய வீரர்களை சமாதானம் செய்தது.
அடுத்து இந்திய வீரர்களுக்கு ஹோட்டல் அறையில் போதிய சவுகரியங்கள் இல்லை என்ற புகார் எழுந்தது. மேலும் ஹோட்டலில் இருக்கும் உடற்பயிற்சி கூடத்தில் இந்திய வீரர்களுக்கு தேவையான வசதிகள் எதுவும் இல்லை என முன்னணி வீரர்கள் கூறியுள்ளனர். தொடர்ந்து புகார் மேல் புகார் வந்ததால் பிசிசிஐ அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்தது. அதன்படி இந்திய வீரர்கள் தங்கி இருக்கும் ஹோட்டலுக்கு அருகில் இருக்கும் பிரபலமான உடற்பயிற்சி கூடம் ஒன்றில் அனைத்து வீரர்களுக்கும் சந்தா செலுத்தி உள்ளது. அதன் மூலம் இந்திய வீரர்கள் தினமும் அந்த உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
என்னதான் இந்திய வீரர்களுக்கு போதிய வசதிகள் இல்லை என்ற குற்றச்சாட்டு வந்தாலும் பிற அணி வீரர்களை ஒப்பிடும்போது இந்திய வீரர்கள் சொகுசாக இருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். குறிப்பாக இலங்கை அணிக்கு நான்கு போட்டிகளும் நான்கு வெவ்வேறு இடங்களில் திட்டமிடப்பட்டு உள்ளது. அவர்கள் அதற்காக ஒவ்வொரு போட்டி முடிந்த உடன் உடனடியாக விமான நிலையத்திற்கு சென்று தங்களுக்கான விமானம் சரியான நேரத்தில் வரவில்லை என்றாலும் கூட காத்திருந்து பயணம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இது போலவே மற்ற அணி வீரர்களுக்கும் பல இடையூறுகள் உள்ளன. அவர்களுடன் ஒப்பிடும்போது இந்திய வீரர்கள் ஓரளவு வசதியாகவே இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.