நியூயார்க்: 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா மற்றும் அமெரிக்கா அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பந்து வீசியது. முதல் ஓவரிலேயே அர்ஷ்தீப் சிங் இரண்டு விக்கெட்களை வீழ்த்தி அமெரிக்க அணியை நிலை குலைய வைத்தார்.
அதன் பின் மிக நிதானமாக ரன் சேர்த்து வந்தது அமெரிக்க அணி. அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், பும்ரா மற்றும் ஹர்திக் பாண்டியா என நான்கு வேகப் பந்துவீச்சாளர்களும் மிகக்குறைவாக ரன்களை விட்டுக் கொடுத்து அமெரிக்க அணியை கடும் அழுத்தத்தில் ஆழ்த்தினர். இந்த நிலையில் கேப்டன் ரோஹித் சர்மா ஒன்பதாவது ஓவரை சிவம் துவே-விடம் அளித்தார்.

ஏற்கனவே, நான்கு வேகப் பந்துவீச்சாளர்கள் பந்து வீசி இருந்த நிலையில் ஐந்தாவது பந்துவீச்சாளராக சிவம் துபேவுக்கு வாய்ப்பு அளித்தார் ரோஹித் சர்மா. அக்சர் பட்டேல், ரவீந்திரர் ஜடேஜா என இரண்டு சுழற் பந்துவீச்சாளர்களும் அணியில் இருக்கும் நிலையில் இவருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்பட்டது என்பது கேள்விக்குறியாக இருந்தது.
இந்த நிலையில் சிவம் துபே விக்கெட் வீழ்த்தி தன்னை நிரூபிப்பார் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், அவர் வீசிய முதல் பந்திலேயே அமெரிக்க வீரர் நிதிஷ் குமார் ஃபோர் அடித்தார். அதற்கு முந்தைய நான்கு ஓவர்களில் ஒரு பவுண்டரி கூட அடிக்காத அமெரிக்க அணி, சிவம் துபே வீசிய ஓவரின் முதல் பந்திலேயே ஃபோர் அடித்து அழுத்தத்திலிருந்து வெளியே வந்தது.

அந்த ஓவரின் ஐந்தாவது பந்தில் மற்றொரு அமெரிக்க வீரர் ஸ்டீவன் டெய்லர் 77 மீட்டருக்கு ஒரு சிக்ஸ் அடித்தார். அந்த ஓவரில் மட்டும் 11 ரன்கள் எடுத்தது அமெரிக்க அணி. அதுவரை எட்டு ஓவர்களில் 26 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த அமெரிக்க அணி ஒரே ஓவரில் அதிக ரன்கள் குவித்து அழுத்தத்திலிருந்து விடுபட்டது.
அதன் பின் தொடர்ந்து ரன் குவிப்பில் ஈடுபட்டது அமெரிக்க அணி. இதை எடுத்து சிவம் துபேவை இந்திய அணியிலேயே வைத்திருக்கக் கூடாது என ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அவர் வீசிய மோசமான ஒரு ஓவரால் ஒட்டுமொத்த இந்திய அணிக்கும் பாதிப்பு ஏற்பட்டதாக குறிப்பிட்டு அவரை விளாசி வருகின்றனர். மேலும், சிஎஸ்கே அணியின் கோட்டா-வில் அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டு இருப்பதாகவும் குற்றம் சுமத்தினர்.
பின்னர் இந்தப் போட்டியில் அர்ஷ்தீப் சிங் மற்றும் ஹர்திக் பாண்டியா அபாரமாக விக்கெட் வேட்டை நடத்தி அமெரிக்க அணியை கட்டுப்படுத்தினர். அர்ஷ்தீப் சிங் 4 ஓவர்களில் 9 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்களும், பாண்டியா 4 ஓவர்களில் 14 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்களும் வீழ்த்தினர். அமெரிக்க அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 110 ரன்கள் மட்டுமே எடுத்தது.