துபாய் : டி20 மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வாழ்வா? சாவா? என்ற கட்டத்தில் இன்று பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்திய அணி தங்களுடைய முதல் ஆட்டத்தில் நியூசிலாந்திடம் படுதோல்வியை தழுவியது.
இதன் மூலம் எஞ்சி இருக்கும் அனைத்து ஆட்டங்களிலும் இந்தியா வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இந்த சூழலில் பாகிஸ்தான் அணி தங்களுடைய முதல் ஆட்டத்தில் இலங்கையை வீழ்த்தி நல்ல உத்வேகத்துடன் இருக்கின்றது. இந்த சூழலில் இரண்டு அணிகளும் இதுவரை 15 சர்வதேச டி20 போட்டிகளில் மோதி இருக்கிறார்கள்.

இதில் இந்தியா 12 போட்டிகளில் வென்று பலமான அணியாக இருக்கிறது. இரு அணிகளும் மோதும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் ஃபாத்திமா சானா முதலில் பேட்டிங் செய்வதாக தெரிவித்துள்ளார்.இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர்,நாங்கள் முதலில் பேட்டிங் செய்து அதிக அளவு ரன்கள் குவித்து இந்தியாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்த முயற்சி செய்வோம்.
டயானா எங்கள் அணியில் இன்று விளையாடவில்லை. அவர் இல்லாதது கொஞ்சம் பின்னடைவு தான். எனினும் அவருக்கு பதிலாக அரோபா களமிறங்குகிறார். டயானா இல்லை என்றாலும் நாங்கள் சிறப்பாக விளையாடக்கூடிய அணியாக தான் இருக்கின்றோம். முதலில் பேட்டிங் செய்து அதிக ரன்கள் குவிக்க தான் முயற்சி செய்வோம்.
இந்தியாவுடன் விளையாடுவது எப்போதுமே நல்ல நினைவுகளை தரும். இப்படி ஒரு போட்டியில் நான் பாகிஸ்தான் அணிக்கு தலைமை தாங்குவதை நினைத்து மகிழ்ச்சி கொள்கின்றேன் என்று கூறினார். இதை தொடர்ந்து பேசிய இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்பிரித் கவுர், நாங்களும் முதலில் பேட்டிங் தான் செய்திருப்போம்.
தற்போது நாங்கள் பந்து வீசுவதால் பாகிஸ்தானை குறைந்த இலக்கில் சுருட்ட வேண்டும். எங்கள் அணியில் பிளேயிங் லெவனில் ஒரு மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. பூஜா காயம் காரணமாக இன்றைய ஆட்டத்தில் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக சஞ்சனா களமிறங்குகிறார். முதல் போட்டியில் தோல்வியை தழுவினாலும், பாசிட்டிவ் ஆக இனிவரும் ஆட்டங்களை எதிர்கொண்டு விளையாட வேண்டும்.
அப்படி செய்தால் மட்டுமே எங்களால் மீண்டும் வெற்றி பாதைக்கு வர முடியும். இது குறித்து அணி கூட்டத்தில் நான் பலமுறை பேசி இருக்கிறோம். இன்றைய ஆட்டத்தில் நாங்கள் பாஸிடிவ் ஆக கிரிக்கெட் விளையாடுவோம் என்று ஹர்மன்பிரித் கவர் கூறியுள்ளார். ஆடுகளம் போகப்போக பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்பதால் இந்த டாஸ் இந்தியாவுக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது.