மும்பை : 2007 டி20 உலக கோப்பை கிரிக்கெட் உலகையே மாற்றி அமைத்தது. அதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு தான் டி20 கிரிக்கெட் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய உலகின் முன்னணி கிரிக்கெட் அணிகள் டி20 போட்டிகளில் விளையாட தயக்கம் காட்டி வந்தன.
அதிலும் இந்தியா முற்றிலுமாக டி20 போட்டிகளை ஒதுக்கி வைத்தது. ஆனால் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டி20 போட்டிகள் தான் கிரிக்கெட்டின் எதிர்காலம் என்பதில் உறுதியாக இருந்தது. அதனால் டி20 போட்டிகளுக்கான உலகக் கோப்பையை நடத்த முடிவு செய்தது.

12 அணிகள் கொண்ட உலக கோப்பையாக இது நடைபெற்றது. வெறும் 13 நாட்களிலேயே இந்த தொடரை நடத்தி முடிக்க திட்டமிட்டு இருந்தது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில். இதில் முதல் சுற்றில் நான்கு குரூப்கள் இடம் பெற்றன. ஒவ்வொரு குரூப்பிலும் மூன்று அணிகள் இடம் பெற்று இருந்தன. அப்படி நான்கு குரூப்புகள் உருவாக்கப்பட்டன. அதில் ஒவ்வொரு குரூப்பிலும் இடம் பெற்றிருக்கும் ஒவ்வொரு அணியும், மற்ற இரண்டு அணிகளுடன் ஒரு போட்டியில் மோதும். இந்த போட்டிகளின் முடிவில் ஒவ்வொரு குரூப்பிலும் முதல் இரண்டு இடங்களை பெற்ற அணிகள் சூப்பர் எட்டு சுற்றுக்கு முன்னேறும்.
அந்த வகையில் குரூப் 'டி' யில் இடம் பெற்றிருந்த இந்தியா, பாகிஸ்தான், குரூப் 'சி' யில் இடம் பெற்றிருந்த இலங்கை, நியூசிலாந்து, 'பி' யில் இடம் பெற்றிருந்த ஆஸ்திரேலியா. இங்கிலாந்து. 'ஏ' வில் இடம் பெற்றிருந்த தென்னாப்பிரிக்கா, வங்கதேசம் ஆகிய அணிகள் சூப்பர் எட்டு சுற்றுக்கு முன்னேறின.
சூப்பர் எட்டு சுற்றில் நான்கு, நான்கு அணிகளாக இரண்டு குரூப்புகள் உருவாக்கப்பட்டன. இதிலும் ஒவ்வொரு அணியும் மற்ற மூன்று அணிகளுடன் ஒரு போட்டியில் மோதும். இதன் முடிவில் தங்கள் குரூப்களில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் இரண்டு அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும். அந்த வகையில் குரூப் 'இ'-யில் இடம் பெற்றிருந்த இந்தியா, நியூசிலாந்து அணிகளும், குரூப் 'எஃப்'-இல் இடம் பெற்றிருந்த பாகிஸ்தான், ஆஸ்திரேலியா அணிகளும் அரை இறுதிக்கு முன்னேறின.
அரை இறுதியில் நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் பாகிஸ்தான் அணி நியூசிலாந்து அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அடுத்து நடந்த இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய அரை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா தான் வெல்லும் என அனைவரும் நினைத்த நிலையில், இந்தியா, ஆஸ்திரேலிய அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இது இந்த தொடரின் பெரிய திருப்பு முனையாக அமைந்தது.
இறுதிப் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. ஏற்கனவே, குரூப் சுற்றில் இந்த இரண்டு அணிகளும் மோதிய போட்டி டை-ஆகி இருந்தது. அப்போது பவுல் அவுட் முறையில் இந்தியா வெற்றி பெற்றிருந்தது. அதனால் இறுதிப் போட்டிக்கும் மிகப்பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. இந்த நிலையில் இந்த இறுதிப் போட்டியில் இந்தியா 20 ஓவர்களில் 157 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய பாகிஸ்தான் வெற்றியை நெருங்கிய போதும் விக்கெட்களை இழந்து இருந்தது.
கடைசி விக்கெட் கையில் இருந்த போது ஆறு ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் கடைசி ஓவரில் ஆடி வந்தது பாகிஸ்தான். அப்போது கடைசி விக்கெட்டையும் வீழ்த்தி இந்திய அணி இறுதி போட்டியில் வெற்றி பெற்றது. இதை அடுத்து உலகின் முதல் டி20 உலக கோப்பையை வென்றது இந்திய அணி. இந்த தொடரின் வெற்றி கிரிக்கெட் ரசிகர்களை டி20 போட்டிகளை நோக்கி ஈர்த்தது. இதன் முடிவில் 2008இல் ஐபிஎல் தொடர் துவங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.